Apr 7, 2026 - 06:31 PM -
0
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் துடுப்பாட்ட டேவிட் வார்னர், சிட்னியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 05 ஆம் திகதி மாலை சுமார் 5.30 மணியளவில், சிட்னியின் மரூப்ரா (Maroubra) பகுதியில் உள்ள மலபார் வீதியில் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வார்னர் ஓட்டி வந்த வேன், சோதனைச் சாவடிக்குச் சற்று முன்னதாகவே ஓரமாக நிறுத்தப்பட்டது.
இதைக்கண்டு சந்தேகமடைந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு அதிகாரிகள், அந்த வாகனத்தை நெருங்கிச் சென்று ஓட்டுநரைச் சோதனையிட்டனர். அப்போது வாகனத்தை ஓட்டி வந்தது கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட சுவாசப் பரிசோதனையில் (Breath test) மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வார்னர் கைது செய்யப்பட்டு மரூப்ரா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட விரிவான பரிசோதனையில், அவரது உடலில் மதுவின் அளவு 0.1 ஆக இருந்தது கண்டறியப்பட்டது. இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் இரண்டு மடங்கு கூடுதலாகும்.
கைது நடவடிக்கைக்குப் பிறகு வார்னர் விடுவிக்கப்பட்டாலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிகளில் விளையாடச் சென்றுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வரும் மே மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
39 வயதான டேவிட் வார்னர், கடந்த 2024 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். குறிப்பாக, 2024 ஜனவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு நான்கு வாரங்களுக்கு முன்னதாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்த வார்னர், தற்போது பல்வேறு நாடுகளின் டி20 லீக் போட்டிகளிலும், ஊடகத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
