Apr 8, 2026 - 04:55 PM -
0
இம்முறை சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாளை (09) முதல் பஸ் மற்றும் ரயில்களுக்கான விசேட சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன,
ஏப்ரல் 09 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இந்த விசேட சேவை முன்னெடுக்கப்படும். ஏப்ரல் 9 முதல் 13 ஆம் திகதி பிற்பகல் வரை கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வோருக்காகவும், பின்னர் ஏப்ரல் 15 முதல் 21 ஆம் திகதி வரை மீண்டும் கொழும்பிற்கு வருவோருக்காகவும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
புத்தாண்டு காலத்தில் சுமார் 2.5 இலட்சம் பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சுமார் 1500 மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மிலான் மிரண்டா கருத்து தெரிவிக்கையில், பயணிகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பஸ் முனையம், மாக்கும்புர, கடவத்தை மற்றும் கடுவெலை ஆகிய இடங்களிலிருந்து மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன.
பெஸ்டியன் மாவத்தை முனையத்தில் குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பயணிகளின் வசதிக்காக விசேட ரயில் சேவைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க இந்த ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
