Apr 10, 2026 - 10:06 AM -
0
மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் வடக்கு கடற்பரப்பின், கிளிநொச்சி கடல் எல்லையான இரணைதீவு கடற்பகுதியில் கடந்த 08 ஆம் திகதி கடற்படையினரால் ஒரு படகுடன் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, திணைக்கள அதிகாரிகள் நேற்று (09) குறித்த மீனவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் முற்படுத்தினர்.
வழக்கை விசாரணை செய்த நீதவான், கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
--
