Apr 10, 2026 - 05:15 PM -
0
பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விசேட நடவடிக்கைகளில் சுமார் 2,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அவர்கள் பிரதேச சபை மற்றும் நகர சபை மட்டங்களில் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுப்பார்கள் என அச்சங்கத்தின் அதிகாரி அனுர திலக்சிறி தெரிவித்துள்ளார்.
இதன்படி, உணவு கையாளும் நிறுவனங்களைச் சோதனை செய்தல், சட்ட நடவடிக்கை எடுத்தல், எச்சரிக்கை அறிவித்தல்களை வழங்குதல் மற்றும் வர்த்தகர்களுக்குத் தெளிவூட்டுதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்திற்காகத் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள், கேக் வகைகள் மற்றும் பிஸ்கட் வகைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும், இந்த உணவுகளின் லேபிள்களில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அது குறித்து அந்தந்தப் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்குத் தெரியப்படுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இத்தகைய முறைப்பாடுகள் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவார்கள் எனச் சுட்டிக்காட்டிய அவர், உணவுச் சட்டத்தின் கீழ் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
எனவே, வர்த்தகர்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் மேலதிகமாகத் தெரிவித்துள்ளார்.
