Apr 12, 2026 - 02:24 PM -
0
கொழும்பு பீப்பள்ஸ் பார்க் (People's Park) பகுதியிலிருந்து ஹற்றன், நாவலப்பிட்டி மற்றும் டயகம ஆகிய இடங்களுக்கு நேற்று (11) இரவு சட்டவிரோதமான முறையில் பயணிகள் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் சோதனை அதிகாரிகள் மற்றும் பெஸ்டியன் மாவத்தை பேருந்து முனைய அதிகாரிகள் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இந்தச் சோதனையின் போது சட்டவிரோத போக்குவரத்தில் ஈடுபட்ட 7 பேருந்துகள் மீட்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்துகள் பயணிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பணம் வசூலித்துள்ளதோடு, முறையான அனுமதிப்பத்திரம் இன்றியும் சேவையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த ஷெரின் அத்துகோரலட,
இவ்வாறான பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத பேருந்துகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்துப் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய பேருந்து நிலையம், பெஸ்டியன் மாவத்தை முனையம் மற்றும் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் இலங்கை போக்குவரத்துச் சபை ஊடாக உங்களுக்கான சட்டபூர்வ போக்குவரத்து வசதிகளை நாம் தயார் செய்துள்ளோம்.
சட்டவிரோத சேவைகளைப் பயன்படுத்தினால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன் பாதுகாப்பற்ற நிலையும் உருவாகும்.
இவ்வாறான 7 பேருந்துகளை நேற்று சுற்றிவளைத்து, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
