Apr 12, 2026 - 02:51 PM -
0
தமது உடலில் கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்து நாட்டுக்குள் கொண்டு வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உகண்டா நாட்டைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
இவர் உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து புறப்பட்டு, கட்டார் நாட்டின் தோஹாவை வந்தடைந்து, அங்கிருந்து கட்டார் விமான சேவையின் QR-664 என்ற விமானம் மூலம் இன்று காலை 9.30 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இவர் சிக்கியுள்ளார்.
சந்தேகநபரான பெண்ணை முழுமையான சோதனைக்கு உட்படுத்திய போது, அவர் தனது உடலில் 21 மாத்திரைகளாக மறைத்து வைத்திருந்த 274 கிராம் கொக்கெய்ன் கண்டறியப்பட்டது.
அத்துடன், அவர் மேலும் சில கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கியிருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட உகண்டா நாட்டுப் பெண் மேலதிக வைத்திய சிகிச்சை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
