Apr 12, 2026 - 08:47 PM -
0
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் உடரட்ட மெனிகே புகையிரதச் சேவை தற்போது ரம்புக்கனை வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
டித்வா புயலினால் பிரதான புகையிரதப் பாதையில் சேதமடைந்த 223 இடங்களில் சிலவற்றில் புனரமைப்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதே இதற்குக் காரணமாகும்.
அண்மைக்கால வரலாற்றில் இலங்கைக்கு அதிகப்படியான பௌதிகப் பாதிப்புகளை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவாக, கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டை ஊடறுத்துச் சென்ற டித்வா புயல் பதிவாகியுள்ளது.
இது மக்களின் பிரதான போக்குவரத்து ஊடகங்களில் ஒன்றான புகையிரதப் போக்குவரத்துத் தொகுதிக்கு சுமார் 69 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமைவாய்ந்த 292 கிலோமீற்றர் நீளமுடைய கொழும்பு - பதுளை பிரதான பாதையில் மாத்திரம், மண்சரிவு மற்றும் நிலக்கீழ் இறக்கம் காரணமாக 223 சேதங்கள் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக கொழும்புக்கும், மலையகத்திற்கும் இடையிலான புகையிரதப் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
கடந்த நான்கு மாதங்களாக புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட கடும் முயற்சியின் பலனாக, பிரதான பாதையின் சில புகையிரத நிலையங்களுக்கு இடையிலான போக்குவரத்து வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், கொழும்பிலிருந்து தொடர்ச்சியாகப் பயணிக்கக்கூடிய தூரம் தற்போது ரம்புக்கனை வரை மட்டுமேயாகும்.
தற்போது புனரமைக்கப்பட்டு வரும் ரம்புக்கனை முதல் இஹல கோட்டை வரையான பகுதியில் மாத்திரம் டித்வா புயலினால் 22 இடங்கள் சேதமடைந்துள்ளன.
பெரும் மண்சரிவினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த கன்சலகமுவ பகுதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், மண்சரிவினால் கடும் சேதத்திற்குள்ளாகியிருந்த இஹல கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியை புகையிரதத் திணைக்களம் தற்போது திருத்தி அமைத்துள்ளது.
எவ்வாறாயினும், ரம்புக்கனை மற்றும் இஹல கோட்டைக்கு இடையில் அதிக பாதிப்புக்குள்ளான கடிகமுவ புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் திருத்தப் பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.
