Apr 13, 2026 - 01:25 PM -
0
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான 14ம் பாப்பரசர் லியோ வத்திக்கானில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன் உரையாற்றினார்.
அப்போது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை பாப்பரசர் விமர்சித்தார்.
மேலும், மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், போர்கள் பிரிவினையை ஏற்படுத்தும்.
நம்பிக்கை அனைவரையும் இணைக்கும். தற்பெருமை, பணம் போதும். வலிமையை வெளிக்காட்டியதும் போதும். போர்களும் போதும்.
உண்மையான வலிமை வாழ்க்கையில் சேவை செய்வதில் கிடைக்கும். முட்டாள் தனமான போர்களில் இருந்து ஆட்சியாளர்கள் வெளியே வரவேண்டும்.
போர்களை நிறுத்துங்கள். இது அமைதிக்கான நேரம். மேசைகளில் அமர்ந்து ஆயுதம், மரணங்களுக்கு திட்டமிடாமல் பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தத்தில் ஈடுபடுங்கள் என்று கூறினார்.
இந்நிலையில், 14ம் பாப்பரசர் லியோவின் கருத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
தன்னை கிறிஸ்தவ மதக்கடவுள் இயேசு போல் சித்தரித்து தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், நான் பாப்பரசர் லியோவின் ரசிகன் அல்ல.
பாப்பரசர் லியோ தனது பணியை சரிவர செய்வதாக நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் இடதுசாரி சிந்தனையாளராக உள்ளார்.
குற்றங்களில் பாப்பரசர் லியோ மிகவும் வலிமையற்றவர். வெளியுறவுக்கொள்கைகளிலும் அவர் மோசமானவர். ஈரான் அணு ஆயுதத்தை வைத்துக்கொள்ளட்டும் என நினைக்கும் போப் லியோ நமக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
நான் வெள்ளை மாளிகையில் இல்லாவிட்டால் பாப்பரசர் லியோ வத்திக்கானில் இருக்கமாட்டார். போப் லியோ போப்புக்கான வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும்.
இடதுசாரி சிந்தனைகளை கைவிட்டு பொதுஅறிவுடன் சிந்தித்து போப்பாக முயற்சிக்க வேண்டுமே தவிர அரசியல்வாதியாக மாற முயற்சிக்கக்கூடாது.
அது போப் லியோவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
