Apr 13, 2026 - 06:43 PM -
0
தமக்கும் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் மற்றும் நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டு, சமூக ஊடகங்களில் பகிரப்படும் தொலைபேசி உரையாடல் தொடர்பாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முறையான தகுதிகளைக் கொண்ட, அமைச்சரவை அங்கீகாரம் பெற்று ஏற்கனவே ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த விநியோக நிறுவனத்தின் உள்நாட்டுப் பிரதிநிதியைத் தொடர்புகொண்டு, வங்கிப் பிணைப் பத்திரத்தை வங்கி வழங்கிய திகதியான மார்ச் 25-ஆம் திகதியிட்டே சமர்ப்பிக்குமாறு தாம் விடுத்த வேண்டுகோளை, சமூக ஊடகங்கள் தவறான அர்த்தம் வரும் வகையில் சிதைத்து வெளியிட்டுள்ளதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு திரிபுபடுத்தப்பட்ட குரல் பதிவே பல்வேறு கோணங்களில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
