Apr 14, 2026 - 05:15 PM -
0
பிகாரைச் சேர்ந்த 14 வயதான கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் 2025 இல் சிறப்பாக செயல்பட்ட வைபவ் சூர்யவன்ஷி இந்திய U19 அணியிலும் இடம்பிடித்து வருகிறார். ஆசிய கிண்ண போட்டிகளில் வைபவின் ஆட்டம் இந்திய அணிக்கு வெகுவாக கைகொடுத்தது. மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது அதிரடியான ஆட்டத்தால் தினம் ஒரு சாதனையை படைத்து வந்தார்.
U19 உலகக் கிண்ண இந்தியா மீண்டும் வெல்ல உதவியாக இருந்த வைபவ், நடப்பு ஐபிஎல் தொடரில் உலகின் முன்னணி பௌலர்களை அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். பும்ராவின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து வெறித்தனம் காட்டிய வைபவ் சூர்யவன்ஷி, இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 52, 31, 39 மற்றும் 78 ஓட்டங்களை எடுத்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் வைபவ் சூர்யவன்ஷியின் சிறப்பான ஆட்டங்கள், அவரை இந்திய அணியில் இடம்பிடிக்க வழிவகுக்கிறது. 15 வயதான அவர் தற்போது அயர்லாந்துக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடரில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அயர்லாந்து டி20 தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட அணி தேர்வு செய்யப்பட இருப்பதாக பேசப்படுகிறது.
இந்த அணியில் தான் வைபவ் சூர்யவன்ஷியும் இடம்பெற போகிறார். அதாவது அயர்லாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியின் உத்தேசப் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பும்ரா, ஹேசில்வுட் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி கையாண்ட அணுகுமுறையின் அடிப்படையில், அவரை சர்வதேச கிரிக்கெட்டில் விரைவாக அறிமுகப்படுத்துவது குறித்து பிசிசிஐ தேர்வாளர்கள் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்து தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமாகும் வீரர் என்ற பெருமையை அவர் பெறக்கூடும். தற்போதைய சாதனையை ஷஃபாலி வர்மா தன்வசம் வைத்துள்ளார். அவர் 15 வயது, ஏழு மாதம் மற்றும் 27 நாட்களில் அறிமுகமானார்.
ஆண்களைப் பொறுத்தவரை, சச்சின் டெண்டுல்கர் 1989 இல் 16 வயது மற்றும் 205 நாட்களில் அறிமுகமாகியதே சாதனையாக இருந்தது. சச்சின் இந்த சாதனையை தற்போது வைபவ் சூர்யவன்ஷி முறியடிக்க சாத்தியம் உள்ளது. இந்திய அணி வரும் ஜூன் மாத இறுதியில் அயர்லாந்தில் நடைபெறவுள்ள டி20 தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டிகள் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளன.
