Apr 15, 2026 - 05:23 PM -
0
கொலைகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றச் செயல்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 'ராஜு' எனப்படும் சந்தேக நபர், இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல குற்றவாளியான 'கரந்தெனிய சுத்தா'வின் சகோதரரான இவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று இன்று (15) இரவு அல்லது நாளை (16) இந்தியா செல்லவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு கடந்த காலங்களில் இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக சோபன ஹந்தி ஜயலத் டி சில்வா (கரந்தெனிய சுத்தா) மற்றும் அவரது சகோதரரான சோபன ஹந்தி சனத் டி சில்வா (ராஜு) ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. வாடகைக்குக் கொலை செய்யும் பாதாள உலகக் குழுவாகச் செயற்பட்ட இவர்களில், 'கரந்தெனிய சுத்தா' தலைவராக இருந்தபோதிலும், கொலை ஒப்பந்தங்கள் அனைத்தையும் ராஜுவே திட்டமிட்டு வழிநடத்தியுள்ளார். இவர் முன்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையிலும், பின்னர் இராணுவ விசேட படையணியிலும் பணியாற்றிவிட்டு விலகியவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரபல வைத்தியர் ஒருவர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க ஆகியோரின் கொலைகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்த இவருக்கு எதிராக 'சர்வதேச சிவப்பு எச்சரிக்கை' பிறப்பிக்கப்பட்டிருந்தது. போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாய்க்குத் தப்பிச் சென்றிருந்த இவர், சில நாட்களுக்கு முன்னர் இந்தியா வந்து அங்கிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகப் பாதுகாப்புப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனை இந்திய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை அவர் கைது செய்யப்பட்டமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 'கரந்தெனிய சுத்தா'வின் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நுவன் தனுஷ்க என்பவர், இன்று காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தென் மாகாணக் கொலைகளுக்காக ஆயுதங்களை விநியோகித்த இவருக்கு, ஒவ்வொரு தடவையும் 25,000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 26 வயதான இந்தச் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
