Apr 16, 2026 - 10:21 AM -
0
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் ஈரான் அணி நிச்சயமாகப் பங்கேற்கும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் நடைபெற்ற முதலீட்டு மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர், விளையாட்டையும் அரசியலையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டார்.
"அந்தக் காலப்பகுதியில் பிராந்தியத்தில் அமைதியான சூழல் நிலவும் என்று நாங்கள் நம்புகிறோம். அது விளையாட்டுக்கு பெரும் ஊக்கமளிக்கும். எது எப்படியாயினும், ஈரான் இத்தொடரில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும்," என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு ஈரான் இத்தொடரில் பங்கேற்பது பொருத்தமானதல்ல என்றும், அது வீரர்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமையலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தமது நாடு உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்காது என ஈரான் விளையாட்டுத் துறை அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.
அதேநேரம், தமது போட்டிகளை அமெரிக்காவிற்கு வெளியே மெக்சிகோவிற்கு மாற்றுமாறு ஈரான் விடுத்த கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது.
கால்பந்து மைதானத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்ட கால வரலாறு உள்ளது. 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவைத் தோற்கடித்து ஈரான் தனது முதல் உலகக் கிண்ண வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2022 ஆம் ஆண்டு ஈரான் அணியை அமெரிக்கா தோற்கடித்தது.
இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் ஈரான் தனது ஆரம்பச் சுற்றுப் போட்டிகளை லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்களில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
