Apr 16, 2026 - 12:11 PM -
0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, ஐபிஎல் 2026 தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
இந்த சீசனில் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு வலுசேர்த்த கலீலின் இந்த விலகல், அந்த அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அவரது காயம் தொடர்பில் வெளியாகியுள்ள வைத்திய தகவல்களின்படி,
கலீல் அகமதுவுக்கு வலது தொடையில் 'கிரேடு 2' (Grade 2) அளவிலான தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது. அவரது வலது 'ரெக்டஸ் ஃபெமோரிஸ்' தசைநாரில் பகுதி அளவிலான கிழிவும், தசையில் முழுமையான கிழிவும் ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த காயத்தின் தீவிரம் காரணமாக, அவர் 10 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட முடியாது.
கலீல் அகமதுவின் விலகல் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பிரிவில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மாற்றாக யாரை களம் இறக்குவது என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
