Apr 16, 2026 - 07:33 PM -
0
உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு மிக அதிக விலையாக 286 அமெரிக்க டொலர்களை செலுத்தி இலங்கை கச்சா எண்ணெயை கொள்வனவு செய்துள்ளதாக 'மிட்ல் ஈஸ்ட் ஐ' (Middle East Eye) இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோர்ஜ் எல்ஹெட்ரி (Georges Elhedery) வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்தை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்னர் உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 70 முதல் 80 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் காணப்பட்டது.
கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி போர் தொடங்கிய பின்னர், அதன் விலை 119 டொலர்கள் வரை உயர்ந்ததுடன், தற்போது மீண்டும் 100 டொலர்களுக்கு கீழ் குறைந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில், ஹொங்கொங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டு மாநாடொன்றில் உரையாற்றிய ஜோர்ஜ் எல்ஹெட்ரி, "தலைப்புச் செய்திகளில் வரும் விலைகள் என்னை கவலையடையச் செய்யவில்லை. நீங்கள் இப்போது மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் பெற முயற்சித்தால் 140 முதல் 150 டொலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும். நான் கேள்விப்பட்ட வரை, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு 286 டொலர் என்ற மிக அதிக விலையை இலங்கை செலுத்தியுள்ளது" என்று கூறியதாக அந்த இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக இன்று மாலை விளக்கமளித்துள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 286 டொலருக்கு கொள்வனவு செய்ததாக பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளது.
தற்போதைய போர் சூழலிலும் கூட, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 71 முதல் 113 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையிலேயே தாம் கொள்வனவு செய்வதாக அந்த கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
