Apr 17, 2026 - 10:44 PM -
0
தரம் குறைந்த நிலக்கரி விநியோகிக்கப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நட்டம் அரசாங்கத்திற்கோ அல்லது மக்களுக்கோ அல்ல, மாறாக சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பதவி விலகல் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை விளக்கினார்.
அமைச்சரின் விளக்கத்தின் முக்கிய குறிப்புகள் பின்வருமாறு:
நிலக்கரி இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய சுமார் 915 கோடி ரூபா நிதியை எரிசக்தி அமைச்சு தற்போது தடுத்து வைத்துள்ளது.
தரம் குறைந்த நிலக்கரி காரணமாக சுமார் 8,000 மில்லியன் ரூபா (800 கோடி) நட்டம் ஏற்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 915 கோடி ரூபாவை தன்வசம் வைத்துள்ளது.
இந்த நட்டம் எக்காரணம் கொண்டும் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 15 மில்லியன் டொலர் (சுமார் 450 கோடி ரூபா) பெறுமதியான செயல்திறன் பிணைமுறி அரசாங்கத்திடம் உள்ளது. அத்துடன், 3 கப்பல்களுக்கான கொடுப்பனவுகளில் சுமார் 500 கோடி ரூபா இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம், இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட நிலக்கரியை மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது என்பதால், அவற்றைப் பயன்படுத்தும் போது ஏற்படும் நட்டத்திற்கு ஏற்ப தண்டப்பணம் அறவிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.
"கடந்த கால அரசாங்கங்களின் போதும் இவ்வாறே தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆய்வு அறிக்கைகளின் படியே இந்த 960 கோடி ரூபா (தண்டப்பணம் மற்றும் பிணைமுறி உட்பட) கணக்கிடப்பட்டுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
