Apr 18, 2026 - 07:13 AM -
0
பாதாள உலகக் கும்பல் தலைவரான 'லொக்கு பெட்டி' என்பவரின் சகோதரரான 'பொடி பெட்டி'யை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சந்தேகநபர் ஒருவர், அஹுங்கல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி அஹுங்கல்ல, லோகன்வத்த மயானத்திற்கு அருகில் மூன்று சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த 'பொடி பெட்டி' மீது, சந்தேகநபர் டி-56 ரக துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். இது தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று இரவு கொஸ்கொட - ஹேகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் மறைந்திருந்த போதே குறித்த சந்தேகநபர் பிடிபட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 13 கிராம் 760 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கொஸ்கொட, பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
