Apr 25, 2026 - 02:36 PM -
0
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிகாரப்பூர்வ அணி தலைவரான பேட் கம்மின்ஸ், முதுகு வலி காரணமாக அவுஸ்திரேலியா சென்றிருந்த நிலையில், தற்போது தனது உடல்தகுதியை நிரூபித்து மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.
இன்று (25) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த சீசனில் அவர் விளையாடும் முதல் போட்டியாகும். ஏப்ரல் 2 ஆம் திகதி கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்மின்ஸ் இல்லாத நிலையில், இளம் வீரர் இஷான் கிஷன் தற்காலிக கேப்டனாகச் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையின் கீழ் ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் ஐதராபாத் அணி 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது.
இப்போது கம்மின்ஸ் திரும்புவதால், அவர் மீண்டும் அணி தலைவர் பொறுப்பை ஏற்பார். தனது வருகையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ள கம்மின்ஸ், "மீண்டும் களத்திற்குத் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
ஐதராபாத் அணியின் நான்கு வெளிநாட்டு வீரர்களாக பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசன் மற்றும் ஈஷன் மலிங்கா ஆகியோர் களமிறங்கக்கூடும்.
இஷான் கிஷனின் தலைமையின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஐதராபாத் அணிக்கு, அனுபவம் மிக்க கம்மின்ஸின் வருகை கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
