Apr 27, 2026 - 05:47 PM -
0
ஐபிஎல் தொடரில், லக்னோவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வீரர் ரகுவன்ஷிக்கு கொடுக்கப்பட்ட அவுட் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. கிரிக்கெட்டில் Bowled, Catch, LBW, Runout, Stumping உள்ளிட்ட முறைகளில் துடுப்பாட்ட வீரர்கள் Out ஆவது வழக்கம்.
இந்த நிலையில் லக்னோவுக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா வீரர் ரகுவன்ஷிக்கு Obstructing the Field என்ற முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரகுவன்ஷி ஒரு ஓட்டத்தை எடுக்க முயன்றார். எதிர் திசையில் இருந்த க்ரீன் வேண்டாம் எனக் கூறவே, தனது க்ரீஸுக்கு ஓடினார்.
அப்போது ஃபீல்டர் வீசிய பந்து, ரகுவன்ஷி மீது பட்டது. ஃபீல்டிங்குக்கு இடையூறு செய்ததால் ரகுவன்ஷிக்கு அவுட் தர வேண்டும் என லக்னோ வீரர்கள் கோரிய நிலையில், 3 ஆவது நடுவர் அவருக்கு அவுட் கொடுத்தார். இதனால் பெவிலியன் திரும்பிய ரகுவன்ஷி கோபத்தில் தனது பேட்டை தரையில் அடித்ததோடு, ஹெல்மெட்டை தூக்கி எறிந்தார்.
Obstructing the Field என்ற முறை தவிர்த்து Hit Wicket, Timed Out, Retired Out ஆகிய முறைகளிலும் வீரர்களுக்கு அவுட் தரப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் ரகுவன்ஷியை தவிர Obstructing the Field முறையில் 3 பேர் விக்கெட்டாகியுள்ளனர்.
கொல்கத்தா அணியில் ரகுவன்ஷியின் சீனியராக இருந்த யூசுப் பதான் தான் இந்த முறையில் அவுட்டான முதல் வீரர்.
அவருக்கு அடுத்தபடியாக அமித் மிஸ்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இதே முறையில் விக்கெட்டை இழந்தனர்.
இதற்கிடையே, ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமும், ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகளின் 2.2வது பிரிவின் கீழ் போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகள், மைதான உபகரணங்கள் அல்லது பொருத்தப்பட்ட பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்கு தண்டனை விதிக்கப்படும்.
அந்த வகையில் சர்ச்சையான அவுட்டால் கோபமடைந்து பேட்டை தரையில் அடித்ததோடு, ஹெல்மெட்டை தூக்கி எறிந்ததற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.
