Apr 29, 2026 - 12:59 PM -
0
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது, அவுட் ஆகி டிரெஸ்ஸிங் ரூம் திரும்பிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் ரியான் பராக், இ-சிகரெட் பயன்படுத்தும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணி தலைவர் ரியான் பராக் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து அவர் இ-சிகரெட் (Vaping) பிடித்த காட்சிகள் வெளியாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (28) முல்லன்பூரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் மைதானத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தபோது, போட்டியின் 16 ஆவது ஓவரில் தான் இந்த சம்பவம் நடந்தது. அப்போது பிராட்காஸ்ட் கேமரா டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் திரும்பியது. அந்த நேரத்தில், ரியான் பராக் இ-சிகரெட் பயன்படுத்தியது தெளிவாகப் பதிவானது. போட்டியில் முக்கியமான நேரத்தில், 16 பந்துகளில் 29 ஓட்டங்களை எடுத்து பராக் ஆட்டமிழந்தார். அவர் டிரெஸ்ஸிங் ரூம் திரும்பிய சில நிமிடங்களிலேயே இது நடந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலாகின. ஒரு அணி தலைவர், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி போன்றவர்களுக்கு இவர் என்ன முன்மாதிரியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் வேப்பிங் செய்வது பற்றி குறிப்பிட்ட விதிகள் எதுவும் இல்லை. ஆனாலும், ஸ்டேடியம் மற்றும் டிரெஸ்ஸிங் ரூமில் புகையிலை அல்லது அது தொடர்பான பொருட்களைப் பயன்படுத்துவது பிசிசிஐ-யின் சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது. சமீபத்தில், இதே தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், மொபைல் போன் பயன்படுத்தியதற்காக ₹1 லட்சம் அபராதம் செலுத்தினார். அதேபோன்ற ஒழுங்கு நடவடிக்கை அணி தலைவர் பராக் மீதும் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
