May 2, 2026 - 03:07 PM -
0
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றப் போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தா தெரிவித்துள்ளார்.
இன்று (02) மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சட்டத்திலிருந்து தப்பிச் செல்ல எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னைய நிலைமையுடன் ஒப்பிடுகையில், தற்போது நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதை பெருமளவில் கட்டுப்படுத்துவதற்கு முப்படைகளும் பொலிஸாரும் விசேட பங்களிப்பை வழங்கியுள்ளதாகச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்தே விநியோக நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறு செயற்படுபவர்களைக் கைது செய்து நாட்டிற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சம்பத் துய்யகொன்தா தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இலங்கையின் முப்படைகளையும் இணைப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. மிக விரைவில் முப்படை உறுப்பினர்களை ஹைட்டி நாட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
மேலும், பாதுகாப்புப் படைகளில் நிலவும் ஆளணி பற்றாக்குறையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
