May 8, 2026 - 01:47 PM -
0
சினிமாவில் அறிமுகமே அதாவது முதல் படமே சூப்பர் ஹிட் படத்தில் நடித்த இந்த தமிழ் நடிகர் இன்று பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். யார் இவர் தெரிகிறதா?.
கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’. இந்தப் படத்தில் சசிகுமார், ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு, சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இன்றும் ‘கல்ட் க்ளாசிக்’ என கொண்டாடப்படுகிறது.
இந்தப் படத்தில் ‘டும்கான்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் மாரிமுத்து. ‘எனக்கு மட்டும் கால் நல்லா இருந்திருந்தா உங்களை உட்கார வைச்சு சோறு போடுவேன்’ என சுப்ரமணியபுரத்தில் வசனம் பேசியிருப்பார். படத்தில் மைக் செட் கட்டுபவராக நடித்திருப்பார்.
மதுரையைச் சேர்ந்த இவரது முழுப்பெயர் மாரிமுத்து. இவரது தாய் - தந்தை இருவரும் சிறுவயதிலேயே இறந்துவிட்டதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். 3 ஆம் வகுப்பு வரை படித்த இவர், லைட்டு, மைக் செட் கட்டும் வேலையே பார்த்து வந்தார். அப்போது இவரை யதார்த்தமாக பார்த்த சசிகுமார் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நடித்த வாய்ப்பு கொடுத்துள்ளார்.
மாரிமுத்துவை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து சென்ற படக்குழுவினர், சில நாட்கள் கழித்து தொலைபேசியில் அழைத்து மாரியை நடிக்க அழைத்துள்ளனர். அப்படி வந்த வாய்ப்பு தான் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் இவரது கதாபாத்திரம் கதையின் போக்கையே மாற்றும். க்ளைமாக்ஸ் வரை நீடிக்கும்.
காமெடியனாக அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது, அவருக்கான வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை. இதற்கான காரணம் குறித்தும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட மாரிமுத்து, “சசிகுமார் பெயரை பச்சை குத்தியுள்ளேன். சசிகுமார் அண்ணன் என் மீது கோபமாக இருக்கிறார்” என்றார்.
”காரணம், நான் குடித்துவிட்டு பார்க்கிறவங்ககிட்ட எல்லாம் அண்ணனோட நம்பரை கொடுத்துட்டேன். அதான் என் மீது அவர் கோபமாக இருக்கிறார். இப்போ நான் நல்லா தான் இருக்கேன். ஆனா, படத்துக்கு யாரும் கூப்பிடல. கிடைச்ச வேலையை செய்றேன். ரேடியோ கடையில் வேலை பார்த்தேன். அதன்பிறகு ஆட்டோ ஓட்டினேன். அந்த ஆட்டோ ரிப்பேர் ஆகி கிடக்கிறது. அதனை சரி செய்ய பணமில்லை” என்றார். இப்போது ஆட்டோவை சரி செய்து மீண்டும் ஆட்டோ ஓட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. எனினும் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாரிமுத்து மாறிபோயுள்ளார்.
இதற்கிடையே திருவிழாக்களுக்கு ரேடியோ செட் கட்ட போன இடத்தில் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து மணமுடித்திருக்கிறார் மாரி. குடிபழக்கத்தால் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் அவர், ஆட்டோ ஓட்டுவது, ரேடியோ செட் போடுவது என கிடைக்கிற வேலையெல்லாம் செய்து வந்திருக்கிறார். சசிகுமார் ‘சுப்ரமணியபுரம் 2’ எடுத்தால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
