May 8, 2026 - 04:52 PM -
0
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தநிலையில், தற்போது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. தவெகவிற்கான ஆதரவுக்கடிதம் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது. இதில் காங்கிரஸ் நேற்றுமுன்தினம் ஆதரவு தெரிவித்த நிலையில், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் ஆதரவு கோரிவந்தது.
இந்நிலையில் இன்று தங்களது ஆதரவு முடிவை உறுதிப்படுத்தியுள்ளது சிபிஐ. நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தவெக கூட்டணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 4 பேர் விஜய்க்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் விசிக தலைவர் திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெகவுக்கு ஆதரவு அளிக்க போகிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;
”தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பது குறித்து ஆலோசிக்க இன்று மாலை விசிக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அரசியல் நெருக்கடி குறித்து இன்று மாலை இணைய வழியாக ஆலோசனை நடைபெற உள்ளது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளை அறிய வேண்டியது எனது கடமை. ஆலோசனை முடிந்த பிறகு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். நாளை காலை முடிவு அறிவிக்கப்படும்.” என்றார்.
