May 9, 2026 - 12:27 PM -
0
சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனது நண்பருக்கு உதவுவதற்காக, வாடகைக்கு கார் எடுத்து எருமைக்கன்றுகளைத் திருடி, அவற்றை ஆட்டு இறைச்சி என விற்பனை செய்து வந்த பாடசாலை மாணவர் ஒருவரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அம்பலாங்கொடை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த மாடு திருட்டு தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தல்கஸ்கொட - கொடஹேன பகுதியில் வைத்து குறித்த மாணவர் கைது செய்யப்பட்டார்.
அம்பலாங்கொடையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் அந்த மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அம்பலாங்கொடை மற்றும் வதுகெதர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களான இந்த மாணவர்கள் திலகபுர பகுதியில் 3 மற்றும் 8 மாத வயதுடைய இரு எருமைக்கன்றுகளை இரு கார்களில் ஏற்றிச் சென்று, கரந்தெனிய - பனாபிட்டிய பகுதியிலுள்ள ஒருவருக்கு விற்பனை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரையும் கைது செய்த பொலிஸார், காட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரு எருமைக்கன்றுகளையும் மீட்டுள்ளனர்.
மாடுகளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட இரு கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை படப்பொல பகுதியிலுள்ள வாகன வாடகை நிலையமொன்றிலிருந்து பெறப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, சந்தேக நபர்கள் சில காலமாக ஆடுகளையும் திருடி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆட்டுக்கறி விலை உயர்ந்ததாக இருப்பதால், கன்றுகளைக் கொன்று அவற்றை ஆட்டுக்கறி என்று கூறி விற்கும் இந்த மோசடி இவ்வாறு நடத்தப்பட்டதாக அம்பலங்கொட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் பாலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
