May 9, 2026 - 02:30 PM -
0
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ள தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது.
2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
தொடர்ந்து விஜய் முதல்-அமைச்சராவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 41 பேர் பங்கேற்றனர். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட 6 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தமது எம்.எல் ஏக்களுடன் ஆட்சியை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சியை மேற்கொண்டிருந்த நிலையில், இவ்வாறு அவர் வாழ்த்து சொல்வது இந்த போட்டியில் இருந்து பின்வாங்குவதாக அமைந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், விசிக இன்று மாலை விஜய்க்கு ஆதரவு என அறிவித்தாலும் இந்த குழப்பம் நீங்கி பெரும்பான்மையுடன் விஜய்யின் ஆட்சி அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் இன்று மாலை வரை தமிழக அரசியல் சூழல் பெரும் பரபரப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
