May 11, 2026 - 03:24 PM -
0
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சூழலில், ஆர்சிபி தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் சொன்ன வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக பிசிசிஐ அவருக்கு அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் பெங்களூரு அணி துடுப்பெடுத்தாடும் போது 18 ஆவது ஓவரின் 2 ஆவது பந்தில் இடம்பெற்றது. க்ருணால் பாண்டியா அடித்த பந்தை மும்பை வீரர்கள் திலக் வர்மா மற்றும் நமன் திர் ஆகியோர் பிடிக்க முயன்று கோட்டை விட்டனர்.
அது சிக்ஸரா இல்லையா என்பதைத் தீர்மானிக்க நடுவர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர். இறுதியில் அது சிக்ஸர் இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவால் கடும் கோபமடைந்த பயிற்சியாளர் ஆண்டி பிளவர், நான்காவது நடுவருடன் எல்லை மீறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பயன்படுத்திய தகாத வார்த்தைகள் (audible obscenity) அங்கிருந்த மைக்கின் மூலம் உறுதியானது.
ஐபிஎல் நடத்தை விதிகளின்படி லெவல் 1 விதிமீறலில் (பிரிவு 2.3) ஆண்டி பிளவர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தனது தவறை ஒப்புக்கொண்ட ஆண்டி பிளவர், போட்டி நடுவர் அமித் சர்மா விதித்த தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
58 வயதான அனுபவம் வாய்ந்த ஒரு பயிற்சியாளரே மைதானத்தில் இப்படி நாகரீகமற்ற முறையில் பேசியது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி கடைசி பந்தில் த்ரில்லர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
167 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு கடைசி 3 பந்துகளில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பேட்டிங்கிலும் ஜொலித்த புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 11 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
