May 12, 2026 - 10:05 AM -
0
சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்காவே நிதி திறைசேரியினால் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் உரத் தட்டுப்பாடு எதுவும் இல்லை எனவும், எனினும் வருங்காலத்தில் உரத்தின் விலையில் சில அதிகரிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன,
''தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் உரத்தின் விலை உயர்ந்துள்ளது. கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நாம் இறக்குமதி செய்யும் உரத்தின் விலையில் உயர்வு ஏற்படும். உர விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும், ஆனால் விலை உயர்வு இருக்கும். இந்த விலை அதிகரிப்பால் விவசாயிகளுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க, நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 5,000 ரூபா மானியம் வழங்கினோம். போர்ச் சூழல் காரணமாக இது மேலதிகமாக வழங்கப்பட்டது. இது 2 ஹெக்டேயர் வரை வழங்கப்படும், அதாவது 10,000 ரூபா கிடைக்கும். அதேபோல், போர்ச் சூழல் காரணமாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் 5,000 ரூபா மேலதிக மானியம் வழங்கத் தீர்மானித்துள்ளோம். அதன்படி உரத் தட்டுப்பாடு ஏற்படாது. விலை உயரக்கூடும், அவ்வாறு விலை உயரும்போது விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய இழப்பைக் குறைக்க அரசு இவ்வாறு மானியத்தை அதிகரித்து வழங்குகிறது'' எனத் தெரிவித்தார்.
