May 14, 2026 - 01:23 PM -
0
உடல் எடையைக் குறைப்பதற்காக தற்போது பயன்படுத்தப்படும் ஊசிகளுக்கு (GLP-1 injections) மாற்றாகவும், அந்த ஊசிகளை நிறுத்திய பின்னர் மீண்டும் உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் உதவும் புதிய மாத்திரை குறித்த ஆராய்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாத்திரை 'ஒர்ஃபோக்லிப்ரான்' (Orforglipron) என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்கனவே அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளதுடன், விரைவில் பிரித்தானியாவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாத்திரையானது, பசியைக் குறைக்கும் ஹோர்மோன் ஒன்றின் செயல்பாட்டைப் பிரதிபலிப்பதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்துகிறது.
இதன் மூலம், ஊசி மூலம் சிகிச்சை பெறுவதை நிறுத்திய ஒருவருக்கு மீண்டும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இது உதவுகிறது.
ஓராண்டு காலம் நடத்தப்பட்ட ஆய்வுகளில், இந்த மாத்திரையை உட்கொண்டவர்கள் தாங்கள் குறைத்த உடல் எடையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவை மீண்டும் அதிகரிக்காமல் அப்படியே பேண முடிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஊசிகளைப் பயன்படுத்துவதை விட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எளிதானது என்பதும், ஊசிகளை விட இதன் செலவு மிகவும் குறைவு என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.
அதேவேளை, குமட்டல், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற சிறிய அளவிலான பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
