May 14, 2026 - 08:26 PM -
0
இலங்கை ரூபாயின் மீதான அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 329 ரூபாய் 92 சதமாக அதிகரித்துள்ளது.
இது 2023 டிசம்பர் 27 ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க டொலர் ஒன்றுக்காக இலங்கையில் பதிவான அதிகூடிய விலையாகும்.
2022 மார்ச் 7ஆம் திகதி வரை 202.99 ரூபாவாக இருந்த டொலர், மார்ச் 8ஆம் திகதி ரூபாயை மிதக்கவிடும் தீர்மானத்துடன் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.
2022 மே மாதம் 12 டொலரின் விற்பனை விலை 377.49 ரூபாய் வரை உயர்ந்தது.
2023 டிசம்பரில் மத்திய வங்கியின் கொள்கை நடவடிக்கைகளால் ரூபாயின் வீழ்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு, 2023 இறுதியில் 328.77 ரூபாயாகக் குறைந்தது.
அதன்பின்னர் 2024 டிசம்பர் 13 ஆம் திகதியே அண்மைக் காலத்தில் பதிவான குறைந்தபட்ச விலை 294.49 ரூபாயாகும்.
2026 ஜனவரி 01 முதல் மே 08 வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 3.6% வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தவிடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்டார்.
நாணயக் கொள்கை கட்டமைப்பின் கீழ் நாணய மாற்று விகிதங்களில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இவ்வருடம் இலங்கை ரூபாய் மட்டுமன்றி ஏனைய நாடுகளின் நாணயங்களும் சரிவடைந்து, அமெரிக்க டொலர் வலுவடைந்துள்ளது.
இதற்கு உலகளாவிய நிச்சயமற்ற தன்மையே பிரதான காரணமாகும்.
700 பில்லியன் டொலர் கையிருப்பு இருந்தும் இந்திய ரூபாயும் சரிவைக் கண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளும் இவ்வாறான வெளிப்புற அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதேவேளை எட்வொகாட்டா (Advocata) பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் இந்த நிலைமை குறித்துப் பின்வரும் காரணிகளைப் பகிர்ந்துள்ளது,
மத்திய கிழக்கு போர் சூழலால் டொலருக்கான கேள்வியை அதிகரித்துள்ளது.
எண்ணெய் மற்றும் கப்பல் போக்குவரத்து, மசகு எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மை மற்றும் கப்பல் கட்டணங்கள் அதிகரிப்பு என்பன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கும், ஏற்றுமதி வருமானம் உயர்வதற்கும் இது வழிவகுக்கும். இருப்பினும், கடன்களை மீளச் செலுத்தும்போது ரூபாயின் பெறுமதி சரிவு நாட்டுக்குப் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
