May 16, 2026 - 10:51 AM -
0
நடிகை காயத்ரி சாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் சுவாமியை விடுதலை செய்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகை காயத்ரி சாயின் கணவரும், ஹாங்காங்கில் தனியார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவருமான சாய்நாத் வெங்கட்ராவின் மர்ம மரணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சுவாமி புலனாய்வு செய்து வந்த நிலையில், அவர் மீது நடிகை பாலியல் புகார் அளித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கு, சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
பத்திரிகையாளர் சுவாமி தரப்பில், புகார் கூறப்பட்ட சம்பவம் ஜூன் 2018 இல் நடந்ததாகக் கூறப்பட்டதாகவும், ஆனால் செப்டம்பர் மாதம் தான் மகளிர் ஆணையத்தில் நடிகை புகார் அளித்து, நவம்பர் மாதம் சைபர் கிரைம் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்த நீண்ட காலதாமதத்திற்கு முறையான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகார்தாரரின் சாட்சி நன்கு கற்றுக்கொடுக்கப்பட்டது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிமன்றம், மூத்த பத்திரிகையாளர் டாக்டர் பிரகாஷ் எம்.சுவாமி மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் காலதாமதமானவை, நம்பகத்தன்மையற்றவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறிய நீதிபதி, அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
