May 17, 2026 - 09:53 AM -
0
ஐந்து வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பதவியுயர்வுகளை மிக விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமை குறித்து கண்டறிவதற்காக நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் சேவையைத் தர ரீதியாகவும், உயர் தொழில்முறை சேவையாகவும் மேலும் அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் அங்கு விளக்கமளித்தார்.
இதற்கமைய, தற்போதைய நிலையில் பொலிஸ் நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் திணைக்களத்திற்குள் நிலவும் மனிதவளப் பற்றாக்குறைக்குத் தீர்வாக 10,000 உத்தியோகத்தர்களைப் புதிதாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
