May 18, 2026 - 09:29 AM -
0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய தீர்மானமிக்க போட்டியில் சென்னை அணி களமிறங்கவுள்ளது.
இந்தப் போட்டியில் சென்னை மற்றும் சன்ரைஸஸ் ஐதரபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30க்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
சென்னை அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி 6 தோல்வி கண்டு 12 புள்ளிகள் பெற்றுள்ளது.
சென்னை அணி எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெறுவதுடன், மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.
இன்றைய ஆட்டத்தில் தோல்வி கண்டால் சென்னை அணி வெளியேறி விடும்.
இதனால் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் களம் காணுகிறது.
இந்த தொடரில் உள்ளூரில் சென்னை அணியின் கடைசி ஆட்டம் இது என்பதால், காயம் காரணமாக இதுவரை விளையாட முன்னாள் தலைவர் தோனி களம் இறங்குவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 7 இல் வெற்றி 5 இல் தோல்வியுடன் 14 புள்ளிகள் எடுத்துள்ளது.
குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 169 ஓட்டங்கள் இலக்கை துரத்தும் போது 86 ஓட்டங்களில் சுருண்டு ஏமாற்றம் அளித்தது.
அந்த அணி எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இன்றி அடுத்த சுற்றுக்குள் முன்னேற முடியும்.
ஒன்றில் வென்றால் மற்ற ஆட்டங்களில் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டியது வரும்.
அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த ஐதராபாத் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும். அதேநேரத்தில் ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 10 ஓட்டங்களால் தோல்வி கண்ட சென்னை அதற்கு பதிலடி கொடுக்குமா? என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் சென்னையும், 8-ல் ஐதராபாத்தும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
