May 27, 2026 - 07:06 AM -
0
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதிச் சுற்றில், நடப்புச் சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களைக் குவித்தது.
அணியின் சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய தலைவர் பட்டிதார் 33 பந்துகளில் 93 ஓட்டங்களைப் (5 பௌண்டரிகள், 9 சிக்ஸர்கள்) பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். விராட் கோலி 43 ஓட்டங்களையும், குருணல் பாண்டியா 43 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். குஜராத் அணியின் பந்துவீச்சில் ரபாடா மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
255 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி, ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அணி தடுமாற்றத்தை சந்தித்தது. திவாட்டியா மட்டும் அதிரடியாக ஆடி 68 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதியில், குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. ஆர்சிபி அணியின் பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தனது இடத்தைப் பதிவு செய்தது.

