May 27, 2026 - 04:57 PM -
0
15 வயது இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் கிறிஸ் கெய்லின் மிக முக்கியமான சாதனையை முறியடிப்பதற்கு மிக அருகில் உள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி துவக்க வீரரான இவர், இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள 14 போட்டிகளில் 232.67 என்ற அசாத்தியமான ஸ்டிரைக் ரேட்டுடன் 583 ஓட்டங்களை குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இதில் ஒரு சதமும், மூன்று அரைசதங்களும் அடங்கும். குறிப்பாக, அவர் எடுத்துள்ள மொத்த ரன்களில் 54 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டங்களை சிக்ஸர்கள் மூலமாகவே பெறப்பட்டவை என்பது அவரது அசுரத்தனமான பேட்டிங் திறமை வெளிப்படுத்துவதாக உள்ளது.
நடப்புத் தொடரில் இதுவரை 53 சிக்ஸர்களை விளாசியுள்ள சூர்யவன்ஷி, சராசரியாக ஒவ்வொரு 4.7 பந்துகளுக்கும் ஒரு சிக்ஸர் என்ற கணக்கில் பந்துகளை எல்லைக்கோட்டிற்கு வெளியே பறக்கவிட்டுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல், ஒரே சீசனில் 59 சிக்ஸர்கள் அடித்ததே இதுவரை சாதனையாக நீடிக்கிறது.
அந்த நீண்டகால சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்னும் வெறும் 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. இன்று நடைபெறும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அவர் களம் இறங்கவுள்ளார்.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த நாக்-அவுட் போட்டி ராஜஸ்தான் அணிக்கு மட்டுமல்லாமல், சூர்யவன்ஷியின் சாதனைப் பயணத்திற்கும் மிக முக்கியமானது.
ஏனெனில், இப்போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை விட்டு வெளியேற நேரிடும் என்பதால், கெய்லின் சாதனையை முறியடிக்க அவருக்குக் கிடைக்கும் கடைசி வாய்ப்பாகவும் இது அமையலாம்.
வெறும் சிக்ஸர் சாதனை மட்டுமின்றி, டி20 போட்டிகளில் கிறிஸ் கெய்ல் வைத்துள்ள உலக சாதனை ஸ்கோரான 175 ஓட்டங்களை முறியடித்து, சர்வதேச டி20 அரங்கில் இரட்டைச் சதம் விளாச வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் இந்த பீகார் இளம் வீரர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு, விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் போன்ற மூத்த வீரர்களுக்கு இணையான நிதானத்தையும், கெய்லுக்கு இணையான அதிரடியையும் காட்டி வரும் இந்த 15 வயது சிறுவனின் இன்றைய ஆட்டத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

