May 28, 2026 - 01:29 PM -
0
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு அவரை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது, எனவே அவசரப்பட வேண்டாம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 29 பந்துகளில் 97 ஓட்டங்களை குவித்து அசத்திய வைபவ், இந்த சீசனில் இதுவரை 680 ஓட்டங்களை குவித்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 45.33 சராசரியுடன் 242.86 ஸ்டிரைக் ரேட்டில் 680 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
இவரது இந்த ஆட்டத்தினால் நேற்று (28) இடம்பெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற முக்கிய புள்ளியாக அமைந்தார்.
நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்களை குவித்தது.
இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 196 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எலிமினேட்டர் போட்டியில் 29 பந்துகளில் 97 ஓட்டங்களை குவித்து அசத்திய வைபவ்வின் இந்த அசுர ஆட்டத்தைக் கண்ட சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பாராட்டி வரும் நிலையில், மைக்கேல் வாகன் போன்றோர் இந்திய அணி இவரை இப்போதே தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
ஆனால், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற ஏற்கனவே சிறப்பாகச் செயல்பட்டு வரும் வீரர்களை நீக்கிவிட்டு இவரைச் சேர்ப்பது முறையல்ல என்று ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்துப் பேசிய ஆகாஷ் சோப்ரா,
"அடுத்த உலகக் கிண்ணத்திற்கு இன்னும் 2 ஆண்டுகள் காலம் உள்ளது. ஐபிஎல் என்பது இந்தியாவின் மிகச்சிறந்த டி20 தொடர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஏற்கனவே சிறப்பாகச் செயல்பட்டு முதலிடத்தில் இருப்பவர்களைத் தூக்கிவிட்டு, புதிதாக ஒருவர் வந்துவிட்டார் என்பதற்காக மாற்றங்கள் செய்யக் கூடாது.
ஒரு வீரர் தேர்வில் தோல்வியடைந்தால் மட்டுமே அவருக்குப் பதிலாக மற்றொருவரைத் தேட வேண்டும். இப்போது அபிஷேக் சர்மா 563 ஓட்டங்களுடனும், சஞ்சு சாம்சன் 477 ஓட்டங்களுடனும் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றனர்" என்றார்.
மேலும் ஆகாஷ் சோப்ரா தெரிவிக்கையில், "இப்போது வைபவை அவசரப்பட்டு அணியில் சேர்த்து, பின்னர் அவர் ஒரு மோசமான காலகட்டத்தை எதிர்கொண்டால், அப்போது மீண்டும் ஒரு புதிய வீரரைத் தேட வேண்டிய கட்டாயம் தேர்வாளர்களுக்கு ஏற்படும். அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் இந்திய கிரிக்கெட்டிற்கு எது சரியோ அதைச் செய்ய வேண்டும்." என்றார்.
"வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதி மட்டுமே. அவருக்கு இன்னும் 20 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. எனவே அவரைப் பக்குவப்படுத்த அவகாசம் தேவை, இதில் அவசரம் காட்டத் தேவையில்லை" என்று கூறினார் ஆகாஷ் சோப்ரா. ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு வைபவ் சூர்யவன்ஷி இந்தியா ஏ அணிக்காக இலங்கைச் சுற்றுப்பயணத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

