Jun 3, 2026 - 02:31 PM -
0
உலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் பங்கேற்கும் 14 ஆவது நார்வே செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி மொத்தம் 10 சுற்றுகள் கொண்டது.
இதன் 8 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வேயின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
இந்திய இளம் வீரரான பிரக்ஞானந்தா கருப்பு காய்களுடன் அபாரமாக விளையாடி கார்ல்சனை தோற்கடித்தார்.
கடந்த 27 ஆம் திகதி நடந்த 3 ஆவது சுற்றிலும் அவர் கார்ல்சனை தோற்கடித்து இருந்தார். இதன்மூலம் ஒரே செஸ் தொடரில் கார்ல்சனை 2 முறை தோற்கடித்து 19 ஆண்டுகால சாதனையை பிரக்ஞானந்தா சமன் செய்தார்.
8 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்லி சோ 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பிரான்சை சேர்ந்த அலி ரெஜா 13 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான இந்தியச் சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் நீண்ட கால சாதனைப் பட்டியலை பிரக்ஞானந்தா தற்போது சமன் செய்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற லினாரஸ் சர்வதேச செஸ் தொடரில், கார்ல்சனை இரண்டு முறை ஆனந்த் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

