Header Logo

ஏனையவை
கடல்சார் பங்காண்மையினைப் பலப்படுத்தும் நான்காவது அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பல்!

Jun 5, 2026 - 09:47 AM -

0

கடல்சார் பங்காண்மையினைப் பலப்படுத்தும் நான்காவது அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பல்!

ஒரு கப்பலை நாட்டிற்குக் கொண்டுவருவதற்காக இலங்கை கடற்படைக் குழுவானது இதுவரை மேற்கொண்ட மிக நீண்ட பயணமாகவும், பனாமா கால்வாயினூடாக இலங்கைக் கடற்படை மேற்கொண்ட முதலாவது பயணமாகவும் அமைந்த, மேரிலாந்தின் பல்டிமோரிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 12,000 கடல் மைல் தூரம் கொண்ட பயணத்தைத் தொடர்ந்து இலங்கையை வந்தடைந்த, எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜய கப்பல் படைத்துறைப் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதை கொண்டாடுவதற்காக கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அமெரிக்கத் தூதரகத்தின் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் இணைந்து கொண்டார். 

இக்கப்பலின் வருகையும் அது படைத்துறைப் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதும், கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், முக்கிய வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பதற்காகவும், சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான ஒரு இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கு உதவி செய்வதற்காகவும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் நீடித்த பங்காண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்க​ல்லை குறிக்கிறது. 

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. அருன ஜயசேகர, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொந்த, இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியும் பாதுகாப்பு இராஜதந்திர அலுவலருமான லெஃப்டினன்ட் கேணல் மத்திவ் ஹவ்ஸ் ஆகியோருடன் ஏனைய கெளரவ அதிதிகளும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர். 

Decisive என அறியப்பட்ட முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜய, அமெரிக்காவின் Excess Defense Articles Program எனும் நிகழ்சித்திட்டத்தினூடாக இலங்கை கடற்படைக்கு மாற்றப்பட்ட நான்காவது முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலாகும். 

Decisive கப்பலானது, மேரிலாந்தில் உள்ள பல்டிமோரில் அமைந்துள்ள அமெரிக்க கடலோர காவற்படைக்குரிய கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டதுடன், இலங்கைக்கு மாற்றுவதற்கு அதைத் தயார் செய்யும் முகமாக அங்கு முழுமையாகப் பழுதுபார்க்கப்பட்டது. 

தனது கடற் பிராந்தியத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுதல், சட்டவிரோத மீன்பிடிப்பு மற்றும் கடல்வழியாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை முறியடித்தல், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மனிதாபிமான அவசரநிலைகளின்போது பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மற்றும் உலகின் மிக முக்கியமான கடல்வழி சந்திப்புகளில் ஒன்றைப் பாதுகாப்பதற்கு உதவி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை இக்கப்பல் மேம்படுத்தும். 

“எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜய தனது சேவையின் ஒரு புதிய அத்தியாயத்தினை இன்று ஆரம்பிக்கிறது” என தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஹொவெல் கூறினார். “ஒரு முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலாக, பாதுகாப்பு, சட்ட அமுலாக்கம் மற்றும் கடல்சார் நலன்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் அமெரிக்க மக்களுக்குச் சிறந்த முறையில் அது சேவையாற்றியது. 

அக்கப்பலை இலங்கைக் கடற்படைக்கு மாற்றியமையானது, எமது இரு நாடுகளையும் இணைக்கும் நம்பிக்கையினையும், பங்காண்மையினையும் பிரதிபலிக்கிறது. இலங்கையானது இந்து சமுத்திரத்தின் மையத்தில் ஒரு முக்கியமான பங்கினை ஆற்றிவரும் நிலையில், இக்கப்பலானது, சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான ஒரு இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க - இலங்கை ஒத்துழைப்பு மற்றும் எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் ஒரு நீடித்த சின்னமாகத் திகழட்டும். 

வரவிருக்கும் வருடங்களில் இக்கப்பல் இலங்கை மக்களுக்கு கௌரவத்துடனும் சிறப்புடனும் சேவையாற்றட்டும்.” என அவர் மேலும் கூறினார். 

பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பல்டிமோரிலிருந்து புறப்பட்ட கப்பல் குழுவினர், புளோரிடாவின் கீ வெஸ்ட், கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சலிஸ், ஹவாயின் ஹோனோலுலு, மற்றும் குவாம் ஆகிய அமெரிக்கத் துறைமுகங்களில் நங்கூரமிட்டு, மூன்று சமுத்திரங்களையும் பல கண்டங்களையும் கடந்து பயணித்து இறுதியில் மே மாதம் 08 ஆம் திகதி திருகோணமலையினை வந்தடைந்தனர். 

பயணத்தின் வழியில், அமெரிக்கத் துறைமுகங்கள் மற்றும் இராணுவத் தளங்களில் அக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர்கள் ஏற்பாட்டியல் உதவிகளைப் பெற்றுக்கொண்டதுடன், இராணுவத்தினருடனும், கடலோர காவற்படையினருடனும் கலந்துரையாடினர். 

அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு பங்காண்மையின் அடிப்படையாக விளங்கும் நெருங்கிய ஒத்துழைப்பினை இது பிரதிபலிக்கிறது. ஏற்கெனவே இலங்கைக் கடற்படையில் சிறப்பாக சேவையாற்றிக் கொண்டிருக்கும் மூன்று முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பல்களான எஸ்எல்என்எஸ் சமுதுர, எஸ்எல்என்எஸ் கஜபாகு, மற்றும் எஸ்எல்என்எஸ் விஜயபாகு ஆகியவற்றுடன் இக்கப்பலும் 

இணைகிறது. எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜய கப்பலின் சேர்க்கையுடன் இலங்கை தற்போது நான்கு முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பல்களை சேவையிலீடுபடுத்துவதுடன் அமெரிக்க Excess Defense Articles Program நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாற்றப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கப்பல்களைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. 

“இலங்கைக் கடற்படையைப் போன்று வெற்றிகரமாக இக்கப்பல்களைப் பராமரிப்பதற்கும், இயக்குவதற்குமான அர்ப்பணிப்பை சில பங்காளர்களே வெளிப்படுத்தியுள்ளனர்.” என அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு இராஜதந்திர அலுவலரான லெஃப்டினன்ட் கேணல் மத்திவ் ஹவ்ஸ் கூறினார். 

“எஸ்எல்என்எஸ் சமுதுர, எஸ்எல்என்எஸ் கஜபாகு, மற்றும் எஸ்எல்என்எஸ் விஜயபாகு ஆகியவற்றின் சிறப்பான நிலை மற்றும் தொழிற்பாட்டு செயற்திறன் என்பன இலங்கை மாலுமிகளின் தொழில்வாண்மைத்துவத்திற்கும் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கும் ஓர் சான்றாகும். 

இக்கப்பல்களை அவர்கள் நிர்வகித்த விதம், இந்த நான்காவது பரிமாற்றத்தைச் சாத்தியமாக்கிய நம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவியது.” என அவர் மேலும் தெரிவித்தார். 

தொடர்ந்து உரையாற்றிய கேணல் ஹவ்ஸ், “எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜயவின் கதையானது ஒரு கப்பலைப் பற்றியது மட்டுமன்றி அதையும் தாண்டியதாகும். அது பங்காண்மை, தயார்நிலைமற்றும் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களைப் பற்றியதாகும். பிராந்திய ஸ்திரத்தன்மைக்குப் பங்களிப்புச் செய்யும், கடல்வழித் தடங்களைப் பாதுகாக்கும், மற்றும் பாதுகாப்பான மற்றும் செழிப்பான ஒரு இந்து சமுத்திரப் பகுதியினை உறுதிசெய்வதற்கு உதவுகின்ற திறமையான பங்காளர்களுக்கு உதவி செய்வதில் அமெரிக்கா பெருமையடைகிறது.” எனவும் குறிப்பிட்டார். 

எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜயவினை படைத்துறைப் பணியில் இணைத்துக் கொள்வதானது, அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பாதுகாப்புப் பங்காண்மையில் மற்றுமொரு மைல்கல்லினை குறிக்கிறது. 

பயிற்சி, உபகரணப் பரிமாற்றங்கள், தொழில்முறைப் பரிமாற்றங்கள் மற்றும் செயற்பாட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றினூடாக, இரு நாடுகளும் தமது கடல்சார் திறன்களைத் தொடர்ந்து பலப்படுத்துவதுடன், இந்தோ - பசிபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகிய பகிரப்பட்ட இலக்குகளையும் மேம்படுத்துகின்றன. 

USCGC Decisive பற்றி, 1968 ஆம் ஆண்டு அமெரிக்க கடலோர காவற்படையின் படைத்துறைப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட USCGC Decisive (WMEC 629) கப்பலானது ஒரு நடுத்தர தாங்குதிறன் கொண்ட Reliance-class கப்பலாக ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக சேவையாற்றியுள்ளது. தனது சேவைக்காலம் முழுவதும் அக்கப்பல், அட்லாண்டிக் சமுத்திரம், கரீபியன் கடல் மற்றும் அமெரிக்க வளைகுடா ஆகிய பகுதிகள் அனைத்திலும் கடல்சார் சட்ட அமுலாக்கம், தேடுதல் மற்றும் மீட்பு, போதைப்பொருள் கடத்தல்களை முறியடித்தல், மற்றும் மீன்பிடி அமுலாக்கப் பணி போன்றவற்றிற்கு உதவி செய்தது. 54 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய பின்னர் 2023 ஆம் ஆண்டு Decisive படைத்துறைப் பணியிலிருந்து நீக்கப்பட்டது. 

அதை இலங்கைக் கடற்படைக்கு மாற்றுவதானது அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் பலமான கடல்சார் பங்காண்மையினைப் பிரதிபலிக்கிறது.


MOST READ

காணொளி
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

title