Jun 5, 2026 - 04:56 PM -
0
வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதைத் தடுக்கும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
குறிப்பாக, தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் விவகாரத்தால் பிசிசிஐ கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து தனது ஓய்வை அறிவித்த 35 வயது ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், உடனடியாக அடுத்த மாதம் நடைபெற உள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்தியாவிற்காக 12 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடிய விஜய் சங்கரின் இந்த அதிரடி முடிவு பிசிசிஐ வட்டாரத்தில் பெரும் அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய விதிகள் நேற்று (04) நடைபெற்ற பிசிசிஐ அபெக்ஸ் கவுன்சில் கூட்டட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாடுவதற்காக ஓய்வு பெறும் இந்திய வீரர்களுக்கு, மீண்டும் இந்தியாவில் விளையாட 5 ஆண்டுகள் தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஒருவேளை அவர்கள் ஓய்வு பெற்று வேறு எங்கும் விளையாடாமல் இருந்தால், இந்தத் தடைக்காலம் ஒரு ஆண்டாகக் குறைக்கப்படும். இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவில்லை. இதற்கான சட்டப்பூர்வ அம்சங்கள் மற்றும் விதிகள் குறித்து பிசிசிஐ இன்னும் ஆலோசித்து மட்டுமே வருகிறது.
வீரர்கள் தங்களின் ஓய்வு முடிவை எடுப்பதற்கு முன் தீர்க்கமாக யோசிக்க வேண்டும் என்ற செய்தியை அவர்களுக்குக் கடத்துவதே இதன் நோக்கம் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கே.எஸ்.பரத் ஓய்வு இந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், 32 வயது விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் தனது சர்வதேச ஓய்வை சமூக வலைதளங்களில் அறிவித்தார்.
7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பரத், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மட்டுமே ஓய்வை அறிவித்துள்ளார். வெளிநாட்டு லீக்குகளில் விளையாட தேவையான ஐபிஎல் ஓய்வு குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
விவாதங்கள் முன்னதாக, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கடந்த ஆண்டு தனது 38 வயதில் ஓய்வு பெற்று அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தமானார். ஐபிஎல் தொடருக்கு போட்டியாக இருக்கும் எந்தவொரு வெளிநாட்டு டி20 தொடரிலும் தங்களது ஒப்பந்த வீரர்கள் விளையாட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. இதனால், வீரர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்று வெளிநாட்டு லீக்குகளுக்குச் செல்வதைத் தடுக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

