Jun 5, 2026 - 09:16 PM -
0
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள காற்று கசிவு காரணமாக, அங்குள்ள விண்வெளி வீரர்களை அவர்களின் விண்கலங்களிலேயே தங்கியிருக்குமாறு நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் அங்கிருந்து உடனடியாக வெளியேறுவதற்கும் தயாராக இருக்குமாறு விண்வெளி வீரர்களுக்கு நாசா அறிவுறுத்தியுள்ளது.
விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பிரிவின் ஒரு பகுதியான 'ஸ்வெஸ்தா' (Zvezda) சேவை மொடியூல் சுரங்கப்பாதைக்குள் (Tunnel) சில காலமாகவே விரிசல்களும் காற்று கசிவுகளும் காணப்பட்டதாக நாசாவின் ஊடகப் பேச்சாளர் பெத்தானி ஸ்டீவன்ஸ் தனது 'X' சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய காற்று கசிவுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இன்று ஒரு பரந்த பழுதுபார்க்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதுடன், ரஷ்யப் பணியாளர்கள் குழுவினர் இந்த காற்று கசிவை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, பாதுகாப்புப் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விண்வெளி வீரர்களை இவ்வாறு விண்கலங்களுக்குள் தங்கியிருக்குமாறு நாசா உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதற்கான நிரந்தர தீர்வு ஒன்றை எட்டும் பொருட்டு, ரஷ்யத் தரப்புடனும் விண்வெளி நிலையத்திற்கு ஆதரவளிக்கும் ஏனைய சர்வதேச சமூகத்துடனும் இணைந்து பணியாற்றி வருவதாக நாசாவின் ஊடகப் பேச்சாளர் தனது 'X' பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ஏழு விண்வெளி வீரர்களில் ஐந்து பேரை, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமக்காக ஒதுக்கப்பட்டுள்ள 'SpaceX Crew Dragon "Freedom"' விண்கலத்திற்குள் தங்குமாறு நாசா அறிவுறுத்தியுள்ளது.

