Jun 6, 2026 - 06:41 PM -
0
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது உக்ரைன் இராணுவம் கடுமையான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முறையான பதிலடியாகவே, தங்களது படைகள் ரஷ்யாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடற்படைத் தளம் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதியை சந்திப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்து, ஒரு நாள் கடந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கிடையில், ரஷ்யாவின் லெனின்கிராட் பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ தெரிவிக்கையில், தங்கள் பிராந்திய வான்வெளியில் 140க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பைக் கருதி வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

