Jun 7, 2026 - 10:32 AM -
0
தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகரும், இயக்குநரும், நகைச்சுவை மன்னனுமான சலீம் குமார் (56), உடல்நலக் குறைவால் கொச்சியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார்.
காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 6, 2026) இரவு 10.43 மணியளவில் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மிமிக்ரி கலைஞராகத் தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய சலீம் குமார், 1990-களின் பிற்பகுதியில் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மலையாளத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஒரு முகமாக மாறினார்.
2010-ஆம் ஆண்டு வெளியான 'ஆதாமின்றெ மகன் அபூ' திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது மற்றும் கேரள மாநில அரசு விருது கிடைத்தது. மேலும், 'அச்சனுறங்காத வீடு' திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான மாநில விருதையும் பெற்றுள்ளார்.
அவரது மறைவுச் செய்தி அறிந்ததும் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், ஜெயராம் உள்ளிட்ட மலையாளத் திரையுலகின் முன்னணி பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
"மலையாள மக்களைத் தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்ததோடு மட்டுமன்றி, அழுத்தமான கதாபாத்திரங்கள் மூலம் சிந்திக்கவும் வைத்த ஒரு மிகச்சிறந்த கலைஞனைத் திரையுலகம் இழந்துவிட்டது" என்று திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.

