Jun 9, 2026 - 12:30 PM -
0
சினிமாத்துறையில் பல விஷயங்கள் மாறினாலும் பெண்களுக்கு திரையில் இன்னும் பல பிரச்சனைகள் நேர்ந்து வருகிறது. சமீபத்தில் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடித்த பெத்தி படத்தில் ஹீரோயின் காட்சிகள் தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
அப்படத்தில் நடிகை ஜான்வி கபூரின் உடல் அமைப்பை மட்டுமே குறி வைத்து இயக்குநர் காட்சிகளை அமைத்துள்ளதாக நெட்டிசன்கள் கடுமையான விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து நடிகைகள் ஆஷிகா ரங்கநாத், டிம்பிள் ஹயாதி என பலரும் குரல் கொடுத்து வந்த நிலையில் நடிகை நித்யா மேனனும் இந்த விவகாரத்தில் தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
பிரபல ஊடகத்திற்கு நித்யா மேனன் அளித்த பேட்டியில், தென்னிந்தியாவில் மட்டும் இந்த அநீதி நடக்கவில்லை, ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே இந்த தப்பான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது.
இன்றைய தயாரிப்பாளர்களுக்கு கலை முக்கியமில்லை, கல்லா கட்டுவது மட்டும்தான் முக்கியம். மக்களை எப்படியாவது தியேட்டருக்கு இழுக்க வேண்டும் என்பதற்காக ஆபாசத்தை ஒரு தந்திரமாக பயன்படுத்துகிறார்கள்.
தேவையற்ற ஐட்டம் பாடல்களை படங்களுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள். வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இத்தகைய கேவலமான வேலைகளை செய்கிறார்கள்.
மேலும், தயாரிப்பாளர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு தலையாட்ட வேண்டிய அவசியம் இல்லை. நடிகைகள் தங்களுக்கு எனச் சொந்தமாக எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.
தவறான மற்றும் அநாகரீகமான காட்சிகளை தயங்காமல் மறுக்க பழக வேண்டும். தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பெண்கள் துணிந்து குரல் கொடுக்க வேண்டும். கண்ணியமான ரோல்களில் மட்டுமே நடிக்க நான் விரும்புகிறேன். எல்லை மீறிய கவர்ச்சி, ஆபாசக் காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன். இது என் தனிப்பட்ட விருப்பம், சமூகப் பொறுப்பு என்றும் நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

