Jun 11, 2026 - 10:56 AM -
0
இலங்கையிலுள்ள லயன்ஸ் கழகத்தின் கீழ் மனிதநேய மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட அறப்பணிப் பிரிவான, லங்கா லயன்ஸ் அறக்கட்டளை (Lanka Lions Foundation - LLF), பாரம்பரிய வங்கி வசதிகளை அணுக முடியாத, பொருளாதார ரீதியாக சிறந்த வகையில் செயற்பட்டு வருகின்ற, குறைந்த வருமானம் உடைய நபர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட தனது நீண்டகால சிறு கடன் (Micro loan) திட்டத்தின் மூலம் அடிமட்டத்திலுள்ள தொழில்முனைவோர் மத்தியில் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
2026 ஏப்ரல் 30ஆம் திகதி நிலவரப்படி, Multiple District 306 இன் 12 மாவட்டங்களிலுமுள்ள 210 லயன்ஸ் கழகங்களினால் பரிந்துரைக்கப்பட்ட 2,668 கடன் பெறுநர்களுக்கு, மொத்தமாக ரூ. 112,784,045 பெறுமதியான 3,079 சிறு கடன்களை இந்த அறக்கட்டளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இலங்கை முழுவதிலும், சுயதொழில், நிதிச் சுதந்திரம் மற்றும் குடும்ப மேம்பாடு ஆகியவற்றிற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக இந்த திட்டம் மாறியுள்ளது.
இதில் பயன் பெற்றவர்களில் 75% இற்கும் அதிகமானோர் சிறு வணிகங்களை ஆரம்பிக்கவும், வீட்டு வருமானத்தை உயர்த்தவும், தங்களது குடும்பங்களுக்கு மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கவும் வாய்ப்புகளைத் தேடுகின்ற பெண் தொழில்முனைவோராவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிறிய அளவிலான சில்லறை வணிகம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் முதல், வீட்டில் தயாரிக்கும் உணவு உற்பத்தி மற்றும் தையல் போன்ற தொழில்கள் வரை, எந்தவொரு வேறு வழிகளினாலும் பெற முடியாத நிதி ஆதரவை வழங்குவதன் மூலம், அடிமட்டத்திலுள்ள தனிநபர்களை இத்திட்டம் தொடர்ந்து வலுவூட்டி வருகிறது.
நிலைபேறான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் அதேவேளையில், நீண்டகால சமூக மேம்பாடு, கண்ணியம் மற்றும் தற்சார்பு ஆகியவற்றை ஆதரிப்பதே, லங்கா லயன்ஸ் அறக்கட்டளையின் சிறு கடன் முயற்சியின் நோக்கமாகும். பாரம்பரிய கடன் வழங்கும் கட்டமைப்புகளுக்கு மாற்றமாக, இத்திட்டம் சமூகத்தில் நன்மை பயக்கும் தாக்கம், சமூகத்திற்கான பரிந்துரை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அத்துடன் தகுதியான பயனாளிகள் உள்ளூர் லயன்ஸ் கழகங்களின் வழிகாட்டல் மற்றும் ஆதரவின் கீழ் நிதி உதவியை நடைமுறை ரீதியாகப் பெறுவதை இது உத்தரவாதம் செய்கிறது.
இந்த அறக்கட்டளையின் பயணம் மற்றும் அதன் தாக்கம் குறித்து லங்கா லயன்ஸ் அறக்கட்டளையின் நிறுவுனர் மஹேந்திர அமரசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “தனிநபர்கள் தங்களையும் தங்களது குடும்பங்களையும் கண்ணியத்துடன் வாழ வைப்பதற்கு அவர்களை வலுவூட்டுவதே, நீண்டகால சமூக மேம்பாட்டிற்கான முதல் படியாகும், எனும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே லங்கா லயன்ஸ் அறக்கட்டளை நிறுவப்பட்டது. எமது சிறு கடன் திட்டமானது, கடின உழைப்பாளிகளுக்கு தொழில்முனைவுக்கான ஆர்வம் வழங்கப்படும் போது, சிறிய அளவிலான நிதி உதவி கூட அவர்களிடையே புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதைக் காண்பிக்கிறது. எமது அறக்கட்டளை மற்றும் இலங்கையின் லயன்ஸ் கழகங்கள் தமது சமூகங்களில் உள்ள தகுதியான பயனாளிகளை அடையாளம் கண்டு ஆதரவளிப்பதில் கொண்டுள்ள தளராத அர்ப்பணிப்பிற்கு, நாம் இதுவரை அடைந்துள்ள பெறுபேறுகள் ஒரு சான்றாகும்.” என்றார்.
நிதி உதவி வழங்குவதைத் தாண்டி, சமூகம் சார்ந்த சேவை முயற்சிகள் மூலம் குறிப்பிடத்தக்க வகையில், வெளிப்படையான சமூக தாக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இலங்கையிலுள்ள லயன்ஸ் அமைப்பின் பரந்த மனிதநேயப் பணியை, இந்த அறக்கட்டளையின் பணி பிரதிபலிக்கிறது. இந்த சிறு கடன் திட்டத்தின் வெற்றியானது, கூட்டுச் சேவை கொண்ட தலைமைத்துவமானது எவ்வாறு நாடு முழுவதும் அடிமட்டத்திலிருந்தான வளர்ச்சிக்கும் பொருளாதார மீளெழுச்சிக்கும் பங்களிக்க முடியும் என்பதற்கான ஒரு சான்றாக அமைகிறது.
தமது தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், லங்கா லயன்ஸ் அறக்கட்டளையானது, குறிப்பாக பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் தன்னிறைவு காண விரும்புகின்ற, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான பாதையைத் தேடுகின்ற ஆர்வமுள்ள சிறிய மட்டத்திலான தொழில்முனைவோர் போன்ற பின்தங்கிய சமூகங்களுக்கான வாய்ப்புகளை வலுப்படுத்தவும், தமது அடைவை விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கிறது.
லங்கா லயன்ஸ் அறக்கட்டளை மற்றும் அதன் முயற்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, www.lankalionsfoundation.org/ எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.

