Jun 11, 2026 - 01:49 PM -
0
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட களிமேடு பகுதியை சேர்ந்தவர் நவலடி நாச்சியப்பன் (45 வயது). விவசாயி. இவர் பட்டுக்கூடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த திலக்நாயக் (25 வயது), அவரது மனைவி மாதுரி விஸ்வகர்மா (20 வயது) ஆகியோர் நவலடி நாச்சியப்பனிடம் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
திலக்நாயக்கும், மாதுரி விஸ்வகர்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர். கணவன் - மனைவி தோட்டத்தில் பட்டுக்கூடுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு அங்கேயே தங்கி இருந்தனர். மாதுரி விஸ்வகர்மா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி மதியம் திலக்நாயக் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது மீன் குழம்பை ஏன் ருசியாக வைக்கவில்லை? என கூறி அவர் மனைவியை திட்டிவிட்டு சென்றார். இதனால் மனமுடைந்த மாதுரி விஸ்வகர்மா, துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த திலக்நாயக், மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் மாதுரி விஸ்வகர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் திட்டியதால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

