Jun 11, 2026 - 07:08 PM -
0
உலகெங்கிலும் உள்ள 6 பில்லியனுக்கும் அதிகமான கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கால்பந்து உலகக் கிண்ணத் தொடர், இலங்கை நேரப்படி நாளை (12) அதிகாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது.
மனித வரலாற்றில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் தனித்துவமான விளையாட்டு நிகழ்வாக இந்த வருட உலகக் கிண்ணத் தொடர் அமையும் என விளையாட்டு விமர்சகர்கள் ஏற்கனவே கணித்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இத்தொடர், கால்பந்து வரலாற்றில் பல தனித்துவமான அம்சங்களுடன் இணைகிறது.
இந்த வருடத்தின் சிறப்பம்சங்கள்:
உலகக் கிண்ண வரலாற்றில் முதல்முறையாக மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து இத்தொடரை நடத்துகின்றன. மேலும், 96 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் முதல்முறையாக இம்முறை 48 அணிகள் பங்கேற்கின்றன.
3 ஆரம்ப விழாக்கள்:
இந்த வருடத் தொடரின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும் மையப்படுத்தி 3 பிரமாண்டமான ஆரம்ப விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையாகும். அந்தந்த நாடுகளில் நடைபெறும் முதல் போட்டி தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த ஆரம்ப விழாக்கள் தொடங்கும்.
மெக்சிகோவில் இன்று ஆரம்ப விழா:
மெக்சிகோவின் புகழ்பெற்ற 'Estadio Azteca' மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆரம்ப விழா இலங்கை நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்குத் தொடங்குகிறது. இதில் உலகப் புகழ்பெற்ற பாடகி ஷகீரா மற்றும் பர்னா பாய் ஆகியோர் இந்த வருட உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ தீம் பாடலான 'டாய் டாய்' (Dai Dai) பாடலை முதல்முறையாக நேரலையில் பாடவுள்ளனர்.
கனடாவின் ஆரம்ப விழா:
கனடாவின் ஆரம்ப விழா டொராண்டோவில் இலங்கை நேரப்படி நாளை (12) இரவு 11 மணிக்கு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆரம்ப விழா:
அமெரிக்காவின் ஆரம்ப விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளதுடன், இது இலங்கை நேரப்படி நாளை மறுதினம் (13) அதிகாலை 5.30 மணிக்கு உலகப் புகழ்பெற்ற பல நட்சத்திரங்களின் பங்கேற்புடன் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடக்கப் போட்டி:
இத்தொடரின் முதலாவது போட்டி நாளை (12) அதிகாலை 12.30 மணிக்கு மெக்சிகோ நகரில், போட்டியை நடத்தும் மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

