Jun 11, 2026 - 09:05 PM -
0
2025 ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர்கள் முறை தொடர்பாக சுமார் 516 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகாரம் தெரிவித்துள்ளது.
ஜூன் 12 ஆம் திகதி அனுசரிக்கப்படும் "குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான சர்வதேச தினத்தை" முன்னிட்டு விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் அந்த அதிகாரம் இதனைத் குறிப்பிட்டுள்ளது.
அதில், குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக 173 முறைப்பாடுகளும், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக 53 முறைப்பாடுகளும், குழந்தைகளை யாசகம் எடுக்க வைப்பது தொடர்பாக 287 முறைப்பாடுகளும் தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகாரத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் முறை என்பது குழந்தைகளின் குழந்தைப் பருவம், அவர்களின் திறன் மற்றும் அவர்களின் கண்ணியத்தை பறிக்கும் வேலை என்றும், அது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதாகும் என்றும் குழந்தை பாதுகாப்பு அதிகாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
16 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையும் கட்டாயக் கல்விக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
16-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் உயிர், ஆரோக்கியம், கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்த முடியும் என்றும், இத்தகைய குழந்தைகளை பாதுகாப்பற்ற வேலைகளிலோ அல்லது இரவு நேர பணிகளிலோ ஈடுபடுத்த முடியாது என்றும் அந்த அதிகாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதுடன், குழந்தைகளைப் யாசகம் எடுக்க வைக்கும் பெற்றோர்கள் மற்றும் தரகர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் 288 ஆவது பிரிவின் கீழ் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தண்டிக்கப்படலாம்.
இதற்கமைய, அனைத்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாதுகாவலர்கள், வணிகர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து குடிமக்களும் இது குறித்து விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும் என தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகாரத்தின் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துதல், தெருக்களில் வியாபாரம் செய்ய வைத்தல், அவர்களைக் கொண்டு சர்க்கஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதித்தல், குழந்தைகளைக் கொண்டு போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்தல், குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்றவை குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகும்.
அதேபோல், சைபர் தொழில்நுட்பம் ஊடாக குழந்தைகளை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால், அதுவும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு ஆபத்தான 71 வேலைகள் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ளதாக குழந்தை பாதுகாப்பு அதிகாரம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

