Jun 15, 2026 - 02:29 PM -
0
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆட்லோ தோட்டப் பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து 74 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 74 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தினரின் தகவலின்படி, குறித்த முதியவர் கடந்த 14 ஆம் திகதி மாலை சுமார் 7 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் தோட்ட மக்கள் இணைந்து அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அக்கரப்பத்தனை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
--

