Jun 15, 2026 - 02:46 PM -
0
அரிசியை நன்றாக இரண்டு அல்லது மூன்று முறை கழுவிய பிறகு, சுத்தமான நீரில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை, அதிகபட்சமாக 30 நிமிடங்கள் மட்டுமே ஊறவைத்து சமைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சமையல் பணிகளை எளிதாக்கும் நவீன உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரிசியை ஒருமுறை கழுவி உடனடியாக சமைப்பது பல வீடுகளில் வழக்கமாகிவிட்டது. ஆனால், அரிசியை சமைப்பதற்கு முன் சில நிமிடங்கள் ஊறவைக்கும் பாரம்பரிய முறைக்கு பின்னால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நம் முன்னோர்கள் அரிசியை சமைப்பதற்கு முன் ஒரு குறிப்பிட்ட நேரம் ஊறவைத்து பின்னரே சமைத்து வந்தனர். இந்த நடைமுறை வெறும் சமையல் நேரத்தைக் குறைப்பதற்காக மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சிறப்பாகப் பெறவும் உதவுகிறது. அரிசியை ஊறவைப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும் அரிசியின் வெளிப்புற அடுக்கில் காணப்படும் 'ஃபைடிக் அமிலம்' (Phytic Acid) என்ற பொருள், இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம் போன்ற முக்கிய தாதுக்களை உடல் முழுமையாக உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடும். அரிசியை ஊறவைக்கும் போது இந்தப் பொருளின் தாக்கம் குறைவதன் மூலம், ஊட்டச்சத்துக்கள் உடலால் எளிதாக உறிஞ்சப்படுகின்றன.
செரிமானத்திற்கு உதவும்: அரிசி ஊறவைக்கப்படும் போது அதிலுள்ள சில இயற்கை நொதிச் செயல்பாடுகள் (Enzymatic Activity) தொடங்குகின்றன. இதனால் மாவுச்சத்து உடலால் எளிதில் செரிமானமாகும் வகையில் மாறுகிறது. இதன் மூலம் வயிற்று உப்பசம், வாயுத் தொல்லை போன்ற செரிமானக் கோளாறுகள் குறையக்கூடும்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: எளிதில் செரிமானமாகும் உணவுகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. குடல் செயல்பாடு சீராக இருந்தால், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுமா? : அரிசியை ஊறவைத்து, பின்னர் பாரம்பரிய முறையில் சமைக்கும் போது அதிலுள்ள சில மாவுச்சத்துகள் குறையக்கூடும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பதை ஓரளவு கட்டுப்படுத்த உதவலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் தங்களுக்கான உணவு முறையை மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப்படி பின்பற்றுவது அவசியம்.

