Jun 16, 2026 - 01:21 PM -
0
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, ஹசித லியனகே மற்றும் ஹியூ டெரி ஆகியோரை 2026 ஏப்ரல் 20 முதல் தனது பணிப்பாளர் சபையில் சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளர்களாக நியமித்துள்ளது.
நிதி இடர்க் கணிப்பியல் (Actuarial) துறையில் வலுவான பின்னணியை கொண்டுள்ள ஹசித லியனகே, ஆயுள் காப்புறுதி, மூலோபாய ஆலோசனை மற்றும் மூலதனச் சந்தைகள் ஆகியவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட நிறுவன நிதி நிபுணர் ஆவார்.
இவர் கடந்த பத்து ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் இணைப்பு மற்றும் கையகப்படுத்தல்கள், மூலதனக் கட்டமைப்பு மேம்படுத்தல்கள், நிதிநிலை மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால மதிப்பு உருவாக்கம் குறித்து பணிப்பாளர் சபைகள், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
அவர் தனது தொழில்முறை வாழ்க்கையை கொழும்பில் உள்ள Insight Services நிறுவனத்தில் தொடங்கினார். அங்கு அவர் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி மற்றும் தாய் (Thai) லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட முன்னணி காப்புறுதி நிறுவனங்களுக்காக நிதி இடர்க் கணிப்பீட்டு மாதிரிகள், மதிப்பீட்டுக் கட்டமைப்புகள் மற்றும் வணிகத் திட்டமிடல் ஆகிய பிரிவுகளில் பணியாற்றினார். பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள AXA லைஃப் நிறுவனத்தில் இணைந்த அவர், உற்பத்தி விலை நிர்ணயம், உட்புற மதிப்பு கணிப்பீடு, சட்டப்பூர்வ நிதி மதிப்பீடுகள் மற்றும் நிதித் திடத்தன்மை பகுப்பாய்வு போன்ற துறைகளில் செயல்பட்டுள்ளார்.
அவர் 2013 இல், கொழும்பை மையமாகக் கொண்ட மூலோபாயம் மற்றும் நிதிசார் ஆலோசனை நிறுவனமான Accede Capitalஐ இணைந்து நிறுவினார். அங்கு அவர் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
இவர் ஐக்கிய இராச்சியத்தின் University of Southampton இல் நிதி இடர்க் கணிப்பியலுடன் கூடிய கணிதத்தில் முதல் வகுப்பு சிறப்புப் பட்டம் பெற்றுள்ளதுடன் Institute and Faculty of Actuaries Charitable Trust Scholarship இன் உதவித்தொகையையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் நிதி இடர்க் கணிப்பீட்டு ஆலோசனை, விலை நிர்ணயம், நிதித் திடத்தன்மை பகுப்பாய்வு மற்றும் நிதிசார் மூலோபாயம் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.
இந் நியமனம், ஆயுள் காப்புறுதி, நிதிசார் மூலோபாயம் மற்றும் ஆலோசனை ஆகிய துறைகளில் அவரது பரந்த அனுபவத்தை வெளிப்படுத்துவதோடு, எதிர்கால பயணத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஜனசக்தி லைஃப்பின் பணிப்பாளர் சபையின் நிபுணத்துவத்தையும் விரிவுபடுத்துகிறது.
ஹியூ டெரி, 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சர்வதேச காப்புறுதித் தொழில்துறை அனுபவம் கொண்ட சிரேஷ்ட காப்புறுதித் துறை நிபுணர் ஆவார். இவர் டிஜிட்டல் மாற்றம், புத்தாக்கம் மற்றும் வணிக மேம்பாடு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இவர் தொழில்நுட்பத்தால் உந்தப்படும் மாற்றங்களை எதிர்கொள்வதில் காப்புறுதித் துறை நிபுணர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கும் சர்வதேசத் தளமான The Digital Insurer இன் ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆவார்.
தொழில்முறை ரீதியாக நிதி இடர் மதிப்பீட்டாளரான இவர், காப்புறுதித் துறையில் தொழிற்பாடு, ஆலோசனை மற்றும் தொழில்முனைவுப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வசித்து வந்துள்ள இவர், ஆசியா மற்றும் பிற சர்வதேச சந்தைகளில் உள்ள காப்புறுதி நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறார். இவரது நியமனம், காப்புறுதி, டிஜிட்டல் மற்றும் சர்வதேச சந்தை தொடர்பான குறிப்பிடத்தக்க நிபுணத்துவத்தை பணிப்பாளர் சபைக்கு வழங்குகிறது.
இந் நியமனங்களுடன் ஜனசக்தி காப்புறுதியின் பணிப்பாளர் சபை தற்போது, அன்னிகா சேனாநாயக்க, தலைவர்; பிரகாஷ் ஷாஃப்ட்டர், பிரதித் தலைவர்; S.ரெங்கநாதன், பணிப்பாளர்; வரிணி டி கொஸ்டா, பணிப்பாளர்; ரமேஷ் ஷாஃப்ட்டர், பணிப்பாளர்; Dr. நிஷான் டி மெல், பணிப்பாளர்; Dr. கிஹான் குணதிலக, பணிப்பாளர்; திலிப் டி எஸ். விஜேரட்ன, பணிப்பாளர்; ஹசித லியனகே, சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளர்; ஹியூ டெரி, சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளர்; மற்றும் ரவி லியனகே, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரை உள்ளடக்குகின்றது. இந் நியமனங்கள், காப்புறுதித் துறையில் நிலைத்தன்மையை வலுப்படுத்தவும் புதுமையை முன்னெடுக்கவும் பன்முக நிபுணத்துவத்தைப் பயன்படுத்தும் ஜனசக்தி இன்சூரன்ஸின் மூலோபாயத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இந் நியமனங்கள் தொடர்பாக இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஒப்புதலுக்கான இறுதி ஆவணங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
ஜனசக்தி லைஃப் பற்றி
1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளதுடன் பரந்த 76 கிளைகள் மற்றும் பிரத்தியேகமான அழைப்பு நிலையத்தையும் கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

