Jun 18, 2026 - 08:41 AM -
0
Fifa உலகக் கிண்ண 2026 தொடரில், காங்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றிலேயே மிக அதிக வயதில் (41 ஆண்டுகள் மற்றும் 132 நாட்கள்) தொடக்க வீரராகக் களம் கண்ட அவுட்ஃபீல்ட் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை போர்ச்சுகல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.
இதன் மூலம், 2022 உலகக் கிண்ணத்தில் கனடா நாட்டு வீரர் அதிபா ஹட்சின்சன் உருவாக்கியிருந்த முந்தைய சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார். மேலும், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியைத் தொடர்ந்து ஆறு உலகக் கிண்ண தொடர்களில் பங்கேற்ற இரண்டாவது ஆண் கால்பந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தொடக்க ஆட்டத்தில், ஆட்டத்தின் 6 ஆவது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணியின் ஜோவா நெவ்ஸ் முதல் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். எனினும், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் காங்கோ அணியின் யோவான் விசா கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. அவர் வெறும் 25 முறை மட்டுமே பந்தைத் தொட்டதுடன், இலக்கை நோக்கி அடித்த 3 வாய்ப்புகளும் வீணாகின. இதன் மூலம், முக்கிய சர்வதேச தொடர்களில் அவர் கோல் அடிக்காமல் இருக்கும் தொடர் 10 போட்டிகளாக நீடித்துள்ளது அவரது ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

