Jun 18, 2026 - 04:03 PM -
0
உலகின் முதலாவது காலநிலை சாதக தேயிலை நிறுவனமான பொகவந்தலாவை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி, நாடளாவிய ரீதியில் பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பு, சூழல்சார் மறுசீரமைப்பு மற்றும் காலநிலை மீள்திறன் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான ஒரு கூட்டு முயற்சியில், அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள், தோட்டச் சமூகங்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பங்குதாரர்களை ஒன்றிணைத்து, ஒரு விரிவான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை நடவடிக்கை பிரச்சாரத்தின் ஊடாக 2026 உலக சுற்றுச்சூழல் வாரத்தை நினைவுகூர்ந்தது. “காலநிலை மற்றும் எமது எதிர்காலத்திற்காக இயற்கையிடமிருந்து உத்வேகம் பெறுவோம்” (Inspired by Nature for Climate and Our Future) எனும் உலகளாவிய கருப்பொருளுடனும், “அவசர காலநிலை நடவடிக்கை” (Urgent Climate Action) எனும் இலங்கையின் தேசியக் கருப்பொருளுடனும் இணங்கிச் செல்லும் வகையில், இம்முயற்சி ஜூன் 1 முதல் 7 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டது. இதன் பிரதான உத்தியோகபூர்வக் கொண்டாட்டம், ஜூன் 2 ஆம் திகதி பொகவந்தலாவை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் டிக்கோயா, வனராஜா தோட்டத்தில் அமைந்துள்ள நிலைபேற்றுத்தன்மை மையத்தில் நடைபெற்றது.
இக் காலநிலை நடவடிக்கை வாரம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள், இளம் சுற்றாடல் ஆர்வலர்களுக்குக் கல்விப்புலமைப்பரிசில்கள் வழங்குதல், பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள், கழிவு மற்றும் நீர் முகாமைத்துவச் செயல்பாடுகள், நீர்வரத்துப் பகுதிகள் மற்றும் நீரேந்துப் பிரதேசங்களை வளப்படுத்துதல் மற்றும் தூய்மையாக்கல் இயக்கங்கள் ஆகியவற்றுடன், சூழல்சார் மறுசீரமைப்புத் திட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான உள்ளூர் பாரம்பரியத் தாவரங்கள் மற்றும் பழ மரங்களை நாட்டுவதற்கான பயிர்ச்செய்கைத் திட்டங்கள் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தது. இத்திட்டம், இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் நீண்டகாலச் சுற்றுச்சூழல் மதிப்பை உருவாக்குவதற்கும் பங்களிப்பு செய்வதுடன், சுற்றுச்சூழல் ரீதியாகப் பொறுப்புணர்வுமிக்க நடைமுறைகள் ஊடாக உயர்தரப் பிரீமியம் தேயிலையை உற்பத்தி செய்வதில் நிறுவனத்திற்குள்ள அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது.
இவ்வார காலப்பகுதியில், நிறுவனத்தின் தோட்டப் பிராந்தியங்கள் முழுவதிலும் 12 க்கும் மேற்பட்ட வெவ்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், அவை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் மத்தியில் சுற்றுச்சூழல் மேலாண்மை, பொறுப்புணர்வுமிக்க கழிவு முகாமைத்துவம் மற்றும் காலநிலை விழிப்புணர்வுடனான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சமூக பங்களிப்புச் செயல்பாடுகளைக் கொண்டிருந்தன. இம்முயற்சிகள் பாடசாலைகள், அரசாங்க அலுவலகங்கள், ஆலயங்கள் மற்றும் ஏனைய பொது இடங்கள் உட்பட, நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள பிரதேசங்களில் 43 இடங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டிருந்தன.
இப்பிரச்சாரத்தின் ஒரு முக்கிய சிறப்பம்சமாக, பொகவந்தலாவை நிறுவனத்தின் தோட்டப் பிராந்தியங்கள் முழுவதிலும் சுமார் 15,000 உள்ளூர் பாரம்பரிய மற்றும் பழம் தரும் தாவரங்கள் விநியோகிக்கப்பட்டு பயிரிடப்பட்டன. பல்லுயிர்ப் பெருக்க மேம்பாடு, நீரேந்துப் பிரதேசப் பாதுகாப்பு, சூழல்சார் மறுசீரமைப்பு, சமூக நல்வாழ்வு மற்றும் காலநிலை மீள்திறன் ஆகியவற்றிற்கான தங்களது பங்களிப்பைக் கருத்திற்கொண்டு இத்தாவர இனங்கள் தெரிவு செய்யப்பட்டன. இதில் உள்ளூர் பாரம்பரிய மரங்களான இலுப்பை, மருதம் மற்றும் வேம்பு ஆகியவற்றுடன், மாதுளை, எலுமிச்சை, கொய்யா மற்றும் சீத்தாப்பழம் உள்ளிட்ட பழம் தரும் தாவர இனங்களும் உள்ளடங்கியிருந்தன. இம்முயற்சிகள் இயற்கைச் சூழல்மண்டமங்களின் மறுசீரமைப்பிற்குப் பங்களிப்பதுடன், உயிரினங்களின் வாழிட மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் என்றும், நீண்டகால பசுமைக்குடில் வாயுத் தணிப்பு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளையில் இயற்கையான காபன் உறிஞ்சுதலை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்பிரச்சார நடவடிக்கை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் நுவரெலியா மாவட்ட அலுவலகம், ஹட்டன் பிராந்திய வன அலுவலகம், பிரதேச சபைகள், நகர சபைகள், பிரதேச செயலகங்கள், விவசாயத் திணைக்களம் மற்றும் பல ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து, பாடசாலை சுற்றாடல் முன்னோடிப் படைப்பிரிவின் பங்களிப்புடன் கூட்டாக நடைமுறைப்படுத்தப்பட்டது. வாரம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டங்கள், கழிவு முகாமைத்துவ முயற்சிகள், பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மரநடுகைத் திட்டங்கள் ஆகியவற்றில் தோட்ட நிர்வாகக் குழுக்கள், ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது தீவிரப் பங்களிப்பை வழங்கியிருந்தனர். பொகவந்தலாவை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறைவேற்றுப் பணிப்பாளர் லலித் முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “தங்களின் 2026 உலக சுற்றுச்சூழல் வாரப் பிரச்சாரத்தின் ஊடாக, பொகவந்தலாவை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி, உலகளாவிய நிலைபேற்றுத்தன்மைத் தலைவராகத் தன் நிலையை மீண்டும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. உலகின் முதலாவது காலநிலை சாதகத் தேயிலை நிறுவனம் என்ற வகையில், அர்த்தமுள்ள சுற்றுச்சூழல் முன்னேற்றமானது கூட்டு முயற்சியின் மூலம் சாத்தியமாகும் என்பதை பொகவந்தலாவை தொடர்ந்து நிரூபித்து வருகின்றது. இது, வருங்கால சந்ததியினருக்காக பசுமையான, ஆரோக்கியமான மற்றும் அதிக நிலைபேறானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், காலநிலை மீள்திறன், பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பு, சூழல்மண்டல மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புணர்வுமிக்க சுற்றுச்சூழல் முகாமைத்துவம் ஆகியவற்றை நோக்கி முன்னின்று வழிநடத்துகின்றது.” என்றார்.
ஆய்வு மற்றும் விருத்தி, நிலைபேற்றுத்தன்மை, தாழ்நில செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் கலாநிதி. துசித பண்டார கருத்துத் தெரிவிக்கையில், “பொகவந்தலாவை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்தில், சுற்றுச்சூழல் நிலைபேற்றுத்தன்மை என்பது வெறும் ஒரு கூட்டாண்மைப் பொறுப்பு மட்டுமல்ல, மாறாக அது எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய முதலீடு என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். உலகளாவிய ரீதியில் காலநிலை சார்ந்த சவால்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், பல்லுயிர்ப் பெருக்கத்தை வலுப்படுத்துதல், காலநிலை மீள்திறனைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றுடன், இலங்கைக்கும் உலகிற்கும் ஒரு பசுமையான, ஆரோக்கியமான மற்றும் அதிக நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக எமது ஊழியர்கள், சமூகங்கள், பங்குதாரர்கள் மற்றும் வருங்கால சந்ததியினருடன் இணைந்து கூட்டு முயற்சியுடன் பணியாற்றுவதில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருக்கின்றோம்.” என்றார்.
தங்களின் 2026 உலக சுற்றுச்சூழல் வாரத்தின் ஊடாக, பொகவந்தலாவை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி காலநிலை நடவடிக்கை, பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான தோட்ட முகாமைத்துவம் ஆகியவற்றிற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் கல்வி, கழிவு முகாமைத்துவம், சூழல்மண்டல மறுசீரமைப்பு மற்றும் சுமார் 15,000 உள்ளூர் பாரம்பரிய மற்றும் பழம் தரும் தாவரங்களை நடும் பணி ஆகியவற்றை ஒரே ஒருங்கிணைந்த திட்டமாக இணைப்பதன் மூலம், அறிவியல் அடிப்படையிலான மற்றும் இயற்கைக்குச் சாதகமான தீர்வுகள் எவ்வாறு நிலையான சுற்றுச்சூழல் மதிப்பை உருவாக்க முடியும் என்பதை இந்நிறுவனம் தொடர்ந்து நிரூபித்து வருகின்றது. அத்துடன், தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினரின் நலனுக்காகத் தனது காலநிலை சாதக மற்றும் நிகர Net Zero தலைமைத்துவத்தையும் இது மேலும் நிலைநிறுத்துகின்றது.

